பதிவு செய்த நாள்
24
மே
2013
10:05
திருச்சி: ஸ்ரீரங்கம் அஹோபில மடம், 46வது ஜீயராக, ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள், நேற்று பட்டமேற்றுக் கொண்டார். வைணவ திருத்தலங்கள் மற்றும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். கோவிலுக்கு முத்தாய்ப்பாக, 236 அடி உயரத்துடன், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரம் என்ற பெருமையை பெற்றது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். மொட்டை கோபுரமாக நின்ற நிலையில், 1979 மே, 20ம் தேதி, ஸ்ரீரங்கம் அஹோபில மடம், 44வது பட்டம், ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் சுவாமிகளின் பெரும் முயற்சியினால் கட்டப்பட்டது. மடத்தின், 45வது ஜீயராக பட்டமேற்ற, நாராயண யதீந்திர மகாதேசிகன் என்கிற, ஸ்ரீமத் அழகிய சிங்கர் சுவாமிகள், 89, கடந்த, 18ம் தேதி இரவு, 12:25 மணிக்கு, காலமானார். அதைத் தொடர்ந்து, இளையபட்டம், ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள் என்கிற, ஸ்ரீமத் அழகிய சிங்கர் சுவாமிகள், 58, ஸ்ரீரங்கம் மடம், தசாவதார சன்னதியில், 46 வது ஜீயராக, நேற்று காலை, பட்டமேற்றார். மடத்தின் சம்பிரதாயப்படி, பட்டமேற்றுக் கொண்ட புதிய ஜீயருக்கு, மறைந்த ஜீயர் அணிந்திருந்த கணையாழி, முறைப்படி அணிவிக்கப்பட்டது. தற்போதைய ஜீயர், 2009ம் ஆண்டு முறைப்படி, இளைய பட்டமாக, தீட்சை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.