பதிவு செய்த நாள்
15
ஜூலை
2013
10:07
மதுரை மாவட்டம் திருமோகூர் அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயிலில் சக்கரத்தாழ்வார் ஜென்ம நட்சத்திரமான ஆனி சித்திரையை முன்னிட்டு மஹா சுதர்ஸன ஹோமம், ஸ்ரீ விஜய வருடம் ஆனி மாதம் 32 ஆம் தேதி 16. 7.2013 செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.
திருமகள் கேள்வனான ஸ்ரீமத் நாராயணன் பூலோகத்தில் அர்ச்சா விக்ரமாக 108 திருப்பதிகளில் சேவை சாதிக்கின்றார். ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திருக்கோயில்கள் திவ்ய தேசங்களாக சொல்லப்படுகிறது. அவற்றுள் வழித்துணையாக, மார்க்கபந்துவாக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திவ்யதேசம் திருமோகூர் ஆகும். பெருமாளை தாயாக, தந்தையாக, நாயகி, நாயகனாக பாடிய ஆழ்வார்கள் இத்திவ்யதேசத்து பெருமாளை மட்டும் நண்பனாக பாவித்துப் பாடியுள்ளார்கள். தாளடைந்தோர் தங்கட்க்கு தானே வழித்துணயாம் காளமேகத்தைக் கதியாக்கி என சரணாகதி மார்க்கத்துக்கு காளமேகப் பெருமாளே உற்ற நண்பனாக சேவை சாத்திக்கின்றார்.
வேண்டுதலை அருளும் ஸ்ரீசுதர்ஸனம்: இத்திருதலத்தில் வேண்டுவோர்க்கு வேண்டுவதை வழங்கும் பிரார்த்தனைக்குரிய மூர்த்தியாக அருள்மிகு சக்கரத்தாழ்வார் சன்னதி அமைப்பட்டுள்ளது. இங்குள்ள சக்கரத்தாழ்வார் பதினாறு கைகளும் அந்த பதினாறு கைகளிலும் பதினாறு விதமான திவ்யாயுதங்களுடன் அருள் செய்கிறார். ஜுவாலாகேசமும், த்ரிநேத்திரமும், சத்ருக்களை அழித்திடும் சம்ஹார சொரூபத்துடன் காட்சியளிக்கிறார். சக்கரத்தாழ்வார் மூலவரில் மூலமந்திரத்திற்கு ஏற்ப சொரூப தேவதைகள் ரூபத்துடனும் உற்சவரில் அஷ்ர(எழுத்து) வடிவிலும் சேவை சாதிக்கிறார். இச்சக்கரத்தின் பின்புறம் நான்கு கைகளில் சக்கரத்துடன் கூடிய நரசிம்ம மூர்த்தி அமையப் பெற்றிருக்கிறது. இவ்வாறு பூரணமான அமைப்புடன் ஸ்ரீசுதர்ஸனச் சக்கரம் இவ்வாலயத்தில் அமைந்து இஷ்ட காரியங்களை பூர்த்தி செய்து வழங்குவதை இன்றும் காணலாம். இவ்வமைப்பு இவ்வாலயத்தில் மட்டுமே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம் போன்ற திவ்ய தேசங்களில் ஸ்ரீநரஸிம்ம சுதர்சனம் சேவை சாதித்தாலும், மந்திர எழுத்துக்களுடனும், ஆகமத்தில் சொல்லப்பட்டவாறு பரிபூரணமாக சேவை சாதிப்பது இத்திருமோகூர் ÷க்ஷத்திரத்தில் மட்டுமே, ஸ்ரீசுதர்ஸன மூர்த்தியை சனிக்கிழமை பவுர்ணமி தினங்களில் வழிபாடு செய்து வியாபார விருத்தி, உத்யோக முன்னேற்றம், கல்யாணம், சந்தான அபிவிருத்தி, நவக்கிரகதோஷம் மற்றும் வியாதிகளும் நீங்க அபிஷேகங்களும், ஆராதனைகளும் ஹோமங்களும் செய்து அன்பர்கள் பயனடைந்து வருகிறார்கள் என்பது இந்த ஸ்ரீசுதர்ஸன வழிபாட்டின் சிறப்பு அம்சமாகும்.
இவ்விசேஷமான சுதர்ஸன மூர்த்திக்கு திருஅவதார தினமான ஆனிச்சித்திரையை (பிறந்த நட்சத்திரம்)முன்னிட்டு லோக ஷேமத்திற்காக மஹா சுதர்ஸன ஹோமம், அலங்கார திருமஞ்சனம், திருவாராதனை மற்றும் கோஷ்டி ஆகியவை.
ஸ்ரீ விஜய வருடம் ஆனி மாதம் 32 ஆம் தேதி 16.7.2013 செவ்வாய்கிழமையன்று சித்திரை நட்சத்திர நன்னாளில் நடைபெறுகிறது.
காலை 6.00 மணிக்கு: ஸுப்ரபாதம், விஸ்வரூபம்
காலை 8.30 மணிக்கு: நித்திய திருவாராதனம் மஹா ஸங்கல்ப்பம், நவகலச ஸ்தபன ஆவாஹனம், திருவாராதனம், அக்னிப் பிரதிஷ்டை, மஹா சுதர்ஸன ஹோமம் ஆரம்பம்....
மதியம் 1.00 மணிக்கு: மஹா பூர்ணாஹீதி
மதியம் 2.00 மணிக்கு: திருமஞ்சனம் ஆரம்பம் தொடர்ச்சியாக திருவாராதனம், திருப்பாவாடை சாத்துமுறை, கோஷ்டி
பக்தர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்
பாண்டிய நாட்டு திவ்ய தேசங்கள் 18ல் முக்கியமானதும், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய இருவராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இத்திருக்கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி எல்லா இடங்களையும் விட ஏற்ற மிக்கதாகும். பக்தர்களுக்கு உடனுக்குடன் அருள்பாளிக்கும் சக்தி வாய்ந்த பெருமாள் ஆகும். இவ்வளவு சிறப்பு பெற்ற இத்திருக்கோயிலில் நித்தியப்படி ஆராதனை கட்டளை புதியதாக துவங்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் திருக்கோயில் அனைத்து சன்னதிகளுக்கும் ஒரு நாள் செலவினை ஆண்டுக்கு ஒருமுறை ஏற்றுக்கொண்டு செலவு செய்து பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வார் அருளை பெற வேண்டுகிறோம். நித்தியபடி பூஜை கட்டளைக்கு ரூ 20,000 முதலீடு செய்தால் அதில் வரும் வட்டியினைக் கொண்டு மேலே சொன்ன செலவுகள் செய்து தங்களுக்கு பரிவட்ட மரியாதை மற்றும் பிரசாதம் வழங்கப்படும்.