பதிவு செய்த நாள்
16
ஜூலை
2013
11:07
கேளம்பாக்கம்: மேலக்கோட்டையூர் மேகநாத ஈஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூர் கிராமத்தில், 1,300ஆண்டுகள் பழமை வாய்ந்த மேகாம்பிகை உடனுறை மேகநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. புராதன சிறப்புடைய இக்கோவிலில், திருப்பணிகள் நடைபெற்றன. விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை முருகர், மேகாம்பிகை ஆகியோரின் சன்னிதிகளுக்கு, விமானம் அமைக்கப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து, நேற்று காலை, கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, யாகசாலை பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. காலை 9:00 மணிக்கு, கலச குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, புனித நீர் விமானங்களில் ஊற்றப்பட்டது. அதை தொடர்ந்து, மகா அபிஷேகமும், மலர் அர்ச்சனை மற்றும் அன்னதானம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.