பதிவு செய்த நாள்
17
ஜூலை
2013
10:07
சபரிமலை: ஆடி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை, நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும், 21ம் தேதி, இரவு, 10:00 மணி வரை, நடை திறந்திருக்கும். சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, ஒவ்வொரு தமிழ் மாதத்திலும், முதல் ஐந்து நாட்கள் திறந்திருக்கும். இந்த நாட்களில், நெய்யபிஷேகம் உட்பட, அனைத்து பூஜைகளும் நடக்கும். மண்டல, மகரவிளக்கு காலத்தில், கூட்டம் அதிகமாக இருப்பதால், மாத பூஜைக்கு, பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. ஆடி மாத பூஜைக்காக, நேற்று மாலை, 5:30 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டது. ஆனாலும், வேறு பூஜைகள் நடக்கவில்லை. இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனத்துக்கு பின், நெய்யபிஷேகம் நடக்கும். வரும், 21ம் தேதி வரை, காலையில் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, மதியம் சகஸ்ரகலச பூஜை, மாலையில் படிபூஜை நடக்கும். 21ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்படும். அதன் பின், நிறைபுத்தரி பூஜைக்காக, ஆகஸ்ட், 1ல் நடை திறக்கப்படும்; மறுநாள் அதிகாலை, 5:45 மணிக்கு, நெற்கதிர்களால் நிறைபுத்தரி பூஜை நடக்கிறது. அன்று இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.