பதிவு செய்த நாள்
17
ஜூலை
2013
10:07
புதுடில்லி: "உத்தரகண்டில், பேய் மழையில் சிக்கிய, கேதார்நாத் கோவிலில், பல இடங்களில், பெரிய அளவில், விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இருந்தாலும், கருவறைக்கு எந்த பாதிப்பும் இல்லை என, தொல்பொருள் ஆய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தில், கடந்த மாதம் பெய்த பேய்மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, ஏராளமானோர் பலியாயினர். பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில், கேதார்நாத் கோவிலும் பலத்த சேதமடைந்தது. இந்நிலையில், கேதார்நாத் கோவிலை ஆய்வு செய்த, தொல்பொருள் ஆய்வு துறை அதிகாரிகள், முதல்கட்ட அறிக்கையை, டில்லி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக, டேராடூன் வட்டார, தொல்பொருள் ஆய்வுத் துறை கண்காணிப்பாளர், அதுல் பார்கவா கூறியதாவது: கனமழை மற்றும் நிலச்சரிவால், கேதார்நாத் கோவிலின், பல இடங்களில், பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும், கோவிலின் கருவறைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எங்களின் ஆய்வு குறித்த, முதல் கட்ட அறிக்கையை டில்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளோம். கோவில் மண்டபத்தின் கிழக்கு பகுதி, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், அதிகப்படியான சேதம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில், இடிபாடுகள் இன்னமும் அகற்றப்படாததால், உண்மையான சேதத்தை மதிப்பீடு செய்ய முடியவில்லை. நிபுணர்களின் முழுமையான ஆய்வுக்குப் பின், உண்மையான சேத நிலவரம் என்ன என்பது குறித்து தெரியும். இவ்வாறு, அதுல் பார்கவா கூறினார்.