உடல், உடை இவற்றுக்கு மேலாக ஒன்று இருக்கிறது. அது தான் உள்ளம். மனம் என்பது மிகச் சுத்தமாக இருக்கவேண்டும். அது இல்லாமல் உடம்பும், உடுப்பும் எவ்வளவு தூய்மையானதாக இருந்தாலும் பயனில்லை. மனசிலே அழுக்குப் படியாமல், அதை அவ்வப் போது தேய்த்துக் கழுவிக் குளிப்பாட்டிக் கொண்டே இருக்கவேண்டும். மனசுக்கு ஏற்படுகிற அழுக்கு என்பது என்ன? தப்பு. தவறு செய்வது தான் உள்ளத்துக்கு அழுக்கு. நாம் செய்கிற காரியங்களில் தவறு ஏற்படக் கூடாது. அதாவது கெட்ட நோக்கங்களுக்காகக் காரியம் செய்யவே கூடாது. ஆனாலும், காரியம் என்று வந்துவிட்டால், நல்லதைச் செய்கிற போது கூட அதிலே சில தப்பும் தவறும் நேர்ந்து விடலாம். இதனால், பெரிய குற்றம் அதாவது தோஷங்கள் உண்டாவது இல்லை. ரொம்பப் பெரியவர்கள் கூட எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்கிற போது, அவர்களும் கொஞ்சம் சறுக்கி விழுந்திருக்கிறார்கள். நாமே எல்லாம் செய்து கொள்ள முடியும் என்று கர்வப்படாமல் பகவான் துணையால் தான் எதையும் சாதிக்க முடியும் என்று நாம் உணர்வதற்காகவே இப்படிசில தவறுகள் நேர்ந்து விடுகின்றன. இம்மாதிரி சமயங்களில் நீங்கள் பகவானை வேண்டிக் கொள்வது தான் சரி. அந்தப் பிரார்த்தனை மன அழுக்கைக் கழுவி விடும். -காஞ்சி பெரியவர்