கும்பகோணம் - சுவாமிமலை செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது மேலக்காவிரி. இங்குள்ள இறைவனின் திருப்பெயர் காசிவிஸ்வநாதர். இறைவி- காசி விசாலாட்சி. ஒரு சமயம் ஊரில் பாய்ந்தோடிக்கொண்டிருந்த காவிரி நதி, இயல்புக்கு மாறாக பூமியைப் பிளந்து கொண்டு அடியில் இறங்கியது. இதை அறிந்த ஊர் மக்கள் அனைவரும் கவலையடைந்தனர். அவ்வூரில் தவம் செய்துகொண்டிருந்த ஆத்ரேய மகரிஷி மக்களின் நலனுக்காக நமசிவாய என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே கரம் கூப்பிய நிலையில் அந்த பிளவுக்குள் விழுந்தார். இதன் பின் நதி இயல்பாக ஓடத்தொடங்கியது. ஆத்ரேய மகரிஷிக்கு சிவனார் திருக்காட்சி தந்தருளினார் என்கிறது திருவலஞ்சுழி ஸ்தல புராணம்.