மனைவியை தாரம் என்றும் சொல்வார்கள். தாய்க்கு பின் தாரம் என்பது, தாய்க்கு நிகராக மனைவியைக் குறிப்பிடுகிறது. தாரம் என்றால் உயர்ந்த கதிக்கு அழைத்துச் செல்வது. இதனால் தான் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைக் கூட தாரம் என்று சொல்வர். தாரம் என்பவள் தன் இல்லத்திலுள்ள எல்லாரையும் அரவணைத்து, எப்படி உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்வாளோ, அதுபோல் ஓம் என்ற பிரணவ மந்திரம் பக்தனை உயர்ந்த கதிக்கு இட்டுச் செல்லும். அதனால் தான் மந்திரம் ஓதும் போது, ஓம் நமோ நாராயணாய, ஓம் முருகா, ஓம் நமசிவாய, ஓம் சக்தி என்று ஓம் சேர்த்துச் செல்கிறோம். ஓம் என்பதை பிரணவம் என்பர். பிரணவம் என்றால் என்றும் புதியது. ஆம்.. கடவுளுக்கு ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை. அதாவது முதலும் இல்லை, முடிவும் இல்லை. இன்னும் எளிமையாய் சொன்னால் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. அவர் எப்போதும் புதியவராகவே இருப்பார். அதுபோல், ஓம் என்னும் மந்திரத்தை ஒலிப்பவனின் ஆத்மாவும், இளமை, முதுமை என்ற சிக்கலுக்குள் மாட்டாமல் பிறப்பற்றதாக இறைவனோடு கலந்து விடும். அவதாரம் என்ற சொல்லுக்குள்ளும் தாரம் இருக்கிறது. இறைவன் பலமுறை அவதாரம் எடுத்து, பக்தர்களுக்கு உயர்ந்த கதிக்கு வழிகாட்டுகிறான். இப்போது புரிகிறதா! தாரம் என்பது எவ்வளவு உயர்ந்த வார்த்தை என்று!