தக்கலை: அகடோபர் 2ம் தேதி பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து நவராத்திரி விழாவுக்கு திருவனந்தபுரத்திற்கு தெய்வ விக்ரகங்கள் புறப்படுகின்றன.குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்கு முன் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இந்த சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாபபுரம் இருந்த போது பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பின்னர் மன்னர் குடும்பத்தினர் திருவனந்தபுரத்துக்கு சென்ற பின்னர் திருவனந்தபுரத்தில் நவராத்தி விழா நடந்து வருகிறது.இவ்விழாவுக்காக ஒவ்வொரு ஆண்டும் பத்மநாபபுரம் தேவார கெட்டு சரஸ்வதி அம்மன் கோயிலில் இருந்து விக்ரகம் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும். சரஸ்வதி தேவிக்கு பக்க துணையாக சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், வேளிமலை முருகன் ஆகிய விக்ரகங்கள் கேரள பாரம்பரிய வரவேற்போடு திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும்.அதுபோல்; இந்த ஆண்டும் 5ம் தேதி நடக்கவுள்ள நவராத்திரி விழாவுக்காக வரும் 2ம் தேதி காலை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து விக்ரகங்கள் செல்கின்றன. முந்தைய நாளான 1ம் தேதி சுசீந்திரத்;திலிருந்து முன்னுதித்த நங்கை தேவி கேரள மற்றும் தமிழக போலீசாரின் பாதுகாப்புடன் பத்மநாபபுரம் வருகிறது. 2ம் தேதி காலையில் 7.30 மணிக்கு அரண்மனை உப்பரிகை மாளிகை தேவாரப்புரையில் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சியும் தொடர்ந்து சரஸ்வதி தேவி விக்ரகத்தை யானை மீதும், குமாரசுவாமி மற்றும் முன்னுதித்த நங்கை தேவி விக்ரகங்கள் பல்லக்கில் ஏந்தியும் திருவனந்தபுரம் நோக்கி கொண்டு செல்லப்படும். பவனிக்கு மன்னர் காலம் முதல் அளிக்கப்பட்டு வந்த ராஜமரியாதையை தொடர்ந்து தற்போதும் மன்னரின் உடைவாள் விக்ரகங்களுக்கு முன்னதாக கொண்டு செல்லப்படுகிறது.
உம்மன் சாண்டி பத்மநாபபுரம் அரண்மனையில் நடக்கும் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சியில் கேரள முதல்வர் உம்மன்சாண்டியும் தேவசம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சிவகுமாரும் பங்கேற்கவுள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பத்மநாபபுரத்திலிருந்து புறப்படும் பவனி அன்றிரவு குழித்துறை மகாதேவர் கோயிலில் சென்றடையும். அங்கு சுவாமி விக்ரகங்களுக்கு பூஜை நடத்தப்படும். 2ம் நாளான 3ம் தேதி இரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோயிலில் விக்ரகங்களுக்கு பூஜை நடக்கும். 3ம் நாளான 4ம் தேதி மாலை திருவனந்தபுரம்கரமனைக்கு சென்றடையும். அங்கிருந்து யானை மீது சரஸ்வதி தேவியும், வெள்ளிக்குதிரை மீது முருக கடவுளும், பல்லக்கில் முன்னுதித்த நங்கை விக்ரகமும் பவனியாக கொண்டு செல்லப்படும். பவனிக்கு கிழக்கே கோட்டையில் கேரள பெண்களின் தாலப்பொலியுடன் கேரள போலீசாரின் பேண்டு வாத்தியம் மற்றும் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்படும். 5ம்தேதி திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா தொடங்குகிறது. அன்றைய தினம் குமரி மாவட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் சரஸ்வதி தேவியை திருவனந்தபுரம் கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத்திலும், வேளிமலை முருகனை ஆரியசாலை கோயிலிலும், முன்னுதித்த நங்கை விக்ரகத்தை செந்திட்டை பகவதி கோயிலிலும் வைத்து 9 நாட்கள் பூஜைகள் நடத்தப்படுகிறது. 9 நாட்கள் பூஜைக்குப் பின் மறுநாள் நல்லிருப்பும் அதைதொடர்ந்து மறுநாள் விக்ரகங்கள் அங்கிருந்து புறப்படுகின்றன.