திருப்பதி: திருச்சானூரில் நேற்று இரவு, புராதன ஏழுமலையான் கோவில் இடிந்து விழுந்தது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு அருகில், 250 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான ஏழுமலையான் கோவில் உள்ளது. இக்கோவிலின் மேல் பாகம், சனிக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.இரவு நேரம் என்பதால், யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன், கோவிலின் நிலைமையை கவனித்த, திருமலை திருப்பதி தேவஸ்தானம், கோவிலை தத்தெடுத்து கொள்ள திட்டமிட்டது. அதற்கு தேவையான நிதியையும் ஒதுக்கியது. ஆனால், செப்பனிடும் பணிகள் துவங்கும் முன், இவ்வாறு நிகழ்ந்ததை அறிந்து அதிகாரிகள் கவலை அடைந்தனர்.இடிபாடுகளை ஆய்வு செய்த தேவஸ்தான அதிகாரிகள், வெகு விரைவில் செப்பனிடும் பணிகளை துவங்க உள்ளதாக தெரிவித்தனர்.