பதிவு செய்த நாள்
04
அக்
2013
11:10
களியக்காவிளை: நவராத்திரி விழாவிற்கு பத்மனாபபுரத்தில் இருந்து எழுந்தருளிய சுவாமி விக்கிரகங்களுக்கு களியக்காவிளையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் நவராத்திரி பூஜைக்காக பத்மநாபபுரத்தில் இருந்து சரஸ்வதி தேவியும், தேவிக்கு துணையாக வேளிமலை முருகன், சுசீந்திரம் முன் உதித்த நங்கை உட்பட விக்கிரகங்கள் திருவனந்தபுரம் செல்வது வழக்கம். இதன்படி நேற்று முன்தினம் சுவாமி விக்கிரகங்கள் பத்மனாபபுரத்தில் இருந்து எழுந்தருளி தக்கலை, மார்த்தாண்டம் வழியாக குழித்துறை மகாதேவர் கோயில் வந்தடைந்தது. நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டு படந்தாலுமூடு வழியாக களியக்காவிளை வந்தடைந்தது. களியக்காவிளையில் முளவறக்கோணம் இளம்பால கண்டன் தர்மசாஸ்தா சாந்தன சங்கம் சார்பில் மலர் தூவி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, குமரி மாவட்ட எல்லையில் கேரள அரசு, அகில இந்திய அய்யப்ப சங்கம், நவராத்திரி சமிதிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அய்யப்ப சேவா சங்க தலைவர் பாலகிருஷ்ணன், திருவனந்தபுரம் மண்டல அய்யப்ப சேவா சங்க தலைவர் வேணு, பொதுச்செயலாளர் சிவன்குட்டி, கேரள அமைச்சர் சிவகுமார், நெய்யாற்றின்கரை தேவசம் போர்டு துணை கமிஷனர் குமாரன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். பத்மநாபபுரத்தில் இருந்து சுவாமி விக்கிரகங்களுடன் எடுத்து வரப்பட்ட உடைவாளை தமிழக தேவசம் போர்டு கமிஷன் ஞானசேகரிடம் இருந்து நெய்யாற்றின்கரை தாசில்தார் சோன் பெற்று கொண்டார். தொடர்ந்து நெய்யாற்றின்கரை டி.எஸ்.பி., றஸ்டம் தலைமையில் போலீசார் அணி வகுப்பு மரியாதையுடன், பஞ்ச வாத்தியங்கள், பேண்ட் வாத்தியங்கள் முழங்க சுவாமி விக்கிரகங்கள் கேரள மாநிலம் சென்றது.
அதன்பின் பாறசாலை உதியன்குளக்கரை, அமரவிளை வழியாக நேற்று மாலை நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுமாமி கோயில் சென்றடைந்தது. அங்கிருந்து இன்று காலை புறப்பட்டு மாலை திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில் சென்றடைகிறது. தொடர்ந்து நவராத்திரி பூஜை கொலு மண்டபத்தில் வைக்கப்படுகிறது. நவராத்திரி பூஜை முடிந்த உடன் சுவாமி விக்கிரகங்கள் குமரி மாவட்டம் திரும்ப உள்ளது. நவராத்திரி பூஜைக்கு எழுந்தருளிய சுவாமி விக்கிரகங்களுடன் பா.ஜ., மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் களியக்காவிளை வரை வந்தார். குமரி மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் களியக்காவிளை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்தார். நெய்யாற்றின்கரை டி.எஸ்.பி., றஸ்டம் தலைமையில் கேரள போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் ரோட்டின் இருபுறங்களிலும் நின்று பூஜை பொருட்களுடன் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், ரோட்டின் இருபுறங்களிலும் முத்துக்குடை மற்றும் தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. மாவட்ட எல்லையில் கேரள வி.ஐ.பி.,க்கள் அமர டெண்டு அமைத்திருந்தனர். சுமாமி பவனியை ஒட்டி வாகனங்கள் பி.பி.எம்., ஜங்ஷன் வழியாக சுமார் ஒரு மணி நேரம் திருப்பி விடப்பட்டன.