பதிவு செய்த நாள்
05
அக்
2013
11:10
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில், தென்னக பண்பாட்டு மையம் மற்றும் நண்பர்கள் குழுவினர் உள்பட பல்வேறு அமைப்பினர் சார்பில், நவராத்திரி கலைவிழா அக் 5ம் தேதி துவங்குகிறது.தஞ்சை தென்னக பண்பாட்டு மையம், தேவஸ்தானம் மற்றும் தென்னக பண்பாட்டு மைய நண்பர்கள் குழு ஆகியவை சார்பில் தஞ்சை பெரியகோவிலில் நவராத்திரி கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்விழா அக் 5 துவங்கி, வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. கலைவிழா முதல்நாளான அக் 5 பிரஹன்நாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரமும், சென்னை நிரஞ்சன சீனிவாசன், பரமேஸ்வரன் குழுவினர் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அக் 6ம் தேதி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம், ஐதராபாத் சிந்துஜாவின் குச்சிப்புடி நடனம், நாகை பாலக்குமாரின் நடராஜர் நடன வித்யாலயா பள்ளி சார்பில் நாட்டிய நாடக நிகழ்ச்சி, 7ம் தேதியன்று, அம்மனுக்கு சதஸ் அலங்காரம், அணையடி செல்வி குழுவினர் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி, சங்கீதா சிவக்குமார் சங்கர நாட்டிய வித்யாலயா பள்ளி வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, மலேஷியா ஷியாமள சேகர் பரதநாட்டியம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அக்., 8ம் தேதியன்று, அம்மனுக்கு காயத்ரி அலங்காரம், 9ம் தேதி அன்னபூரணி அலங்காரம், 10ம் தேதி கெஜலட்சுமி அலங்காரம், 12ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரம், 13ம் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் நடக்கிறது. இதுதவிர, தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும்.இதற்கான ஏற்பாட்டை தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் சஜித், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, இந்து அறநிலையத்துறை தஞ்சை உதவி கமிஷனர் ஞானசேகரன், தென்னக பண்பாட்டு மைய நண்பர்கள் குழு தலைவர் வரதராஜன், கவுரவ செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.