பதிவு செய்த நாள்
05
அக்
2013
10:10
கோவை: கோவை புலியகுளத்தில், பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான, ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள 60 சென்ட் இடத்தை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். கோவை புலியகுளத்தில், போலீஸ் ஸ்டேஷன் அருகிலுள்ள, பெரிய மாரியம்மன் கோவில் 1.08 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இதில், கோவில் 48 சென்ட் இடத்திலுள்ளது. மீதமுள்ள 60 சென்ட் இடத்தை, 38 குடும்பத்தினர் வீடு கட்டி ஆக்கிரமித்திருந்தனர். அறநிலையத்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பை அகற்றி, கோவிலுக்கு சுற்றுப்பிரகாரம் அமைக்க திட்டமிட்டனர். அதன்படி, இடத்தை காலி செய்யுமாறு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் தரப்பட்டது. இதை எதிர்த்தும், குடியிருக்கும் இடத்துக்கு பட்டா வழங்க உத்தரவிடக்கோரியும், ஆக்கிரமிப்பாளர்கள் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில், கோவில் நிலத்திற்கு உரிமை கோரிய மனு, தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில், கோவில் நிலத்தை மீட்க வேண்டி, அறநிலையத்துறை ஆணையரிடம், கோவில் செயல் அலுவலர் மனுத்தாக்கல் செய்தார். இதுதொடர்பாக நடந்த விசாரணை முடிவில், கோவில் நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை காலி செய்வதற்கான உத்தரவை, ஆணையர் பிறப்பித்தார். ஆணையரின் உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் பொதுமக்கள் மீண்டும் மனுத்தாக்கல் செய்தனர். "கோவில் நிலத்துக்கு தனியார் பெயரில் பட்டா வழங்க முடியாது. கோவில் நிலம், கோவிலுக்கு மட்டுமே சொந்தமானது என்று, கடந்த ஜூலை மாதம் ஐகோர்ட் உத்தரவிட்டது. முடிவில், ஆக்கிரமிப்புகளை காலி செய்து கொள்வதற்காக, இரண்டு மாத கால அவகாசம் தரப்பட்டது. யாரும் காலி செய்யாததால், அறநிலையத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, கோவில் செயல் அலுவலர் விமலா மற்றும் அதிகாரிகள், அக் 4 ஆக்கிரமிப்புகளை அகற்றினர். வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 38 ஆண்டுகளாக வசித்த வீடுகளில் இருந்து பாத்திரங்கள், பொருட்களை, பொதுமக்கள் சோகத்துடன் அப்புறப்படுத்தினர். அதன்பின், மின் இணைப்புகளை துண்டித்து, குடியிருப்புகளை "பொக்லைன் வாகனம் மூலம் இடித்து காலி செய்தனர். கோவில் செயல்அலுவலர் விமலா கூறுகையில், ""ஆக்கிரமிப்புகள் 1975 முதல் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு நடந்தது. ஐகோர்ட் உத்தரவையடுத்து, வீடுகளை காலி செய்ய இரண்டு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டது. 60 சென்ட் இடத்தில் இருந்த 38 வீடுகளில், 22 வீடுகள் காலி செய்யப்படவில்லை. ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது பற்றி, ஆக் 3 தகவல் தெரிவிக்கப்பட்டதால், வீடுகளில் இருந்து பொருட்களை அகற்றி மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ஏழு கோடி ரூபாய், என்றார்.