பதிவு செய்த நாள்
14
நவ
2013
11:11
சபரிமலை: தமிழகத்தை விட ஒருநாள் முன்னதாக, கேரளாவில் மண்டல காலம் துவங்கு கிறது. இதையொட்டி, சபரிமலை நடை, நாளை மாலை, 5:30 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலையில், கார்த்திகை, 1ம் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகள், மண்டல காலம் என, அழைக்கப்படுகிறது. சில ஆண்டுகளில் தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் ஒருநாள் வித்தியாசத்தில் கார்த்திகை பிறக்கிறது. அந்த வகையில், கார்த்திகை, 1ம் தேதி, தமிழகத்தில், 17ம் தேதியும், கேரளாவில், 16ம் தேதியும் பிறக்கிறது. இதையொட்டி, சபரிமலை நடை, நாளை மாலை, 5:30 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி, தாமோதரன் போற்றி நடை திறந்து, தீபம் ஏற்றுவார். தொடர்ந்து, அடுத்த ஓராண்டு காலம் தேர்வு செய்யப்பட்டுள்ள, மேல்சாந்திகள் நாராயணன் நம்பூதிரி, மனோஜ் ஆகியோர் இருமுடி கட்டு ஏந்தி, 18ம் படியேறி, கோவில் முன் வருவர். அவர்களுக்கு பிரசாதம் கொடுத்த பின், 6:30 மணிக்கு, தந்திரி கண்டரரு மகேஸ்வரரு, அவர்களுக்கு அபிஷேகம் நடத்தி, அய்யப்பன் மூலமந்திரங்களை சொல்லிக் கொடுத்து, கோவிலுக்குள் அழைத்து செல்வார். வரும், 16ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, புதிய மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி நடை திறந்து, தீபம் ஏற்றியதும், மண்டல காலம் துவங்கும். தொடர்ந்து நெய் அபிஷேகமும், கணபதி ஹோமமும், இதர பூஜைகளும் நடைபெறும். 41 நாட்கள் பூஜைகள் தொடர்ந்து, டிச., 26ல் மண்டல பூஜை நடைபெறும்.