பதிவு செய்த நாள்
18
நவ
2013
10:11
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், உள்ள கோவில்களில், திருக்கார்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில்,திருக்கார்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவையொட்டி, காலை 7:30 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகளும்; காலை 10:30 மணிக்கு திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, விநாயகர், சிவன், அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல், 7:30 மணிக்கு சொக்கப்பனை ஏற்றுதல், வள்ளி தெய்வான சமேத சுப்ரமணிய சுவாமி திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், திருக்கார்த்திகை தீபத்தையொட்டி, சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தது.
இன்று விஷ்ணு தீபம்: பொள்ளாச்சி கரிவரத ராஜப்பெருமாள் கோவிலில், மகா விஷ்ணு தீபத்தையொட்டி, இன்று காலையில், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது. பின், மாலை 6:00 மணிக்கு, விஷ்ணு தீபம் ஏற்றுதல் மற்றும் சொக்கப்பனை கொளுத்துதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது.