பதிவு செய்த நாள்
23
டிச
2013
10:12
சபரிமலை: சபரிமலையில், மண்டலபூஜைக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நேற்று காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து தங்க அங்கி பவனி புறப்பட்டது. சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலபூஜை, 26-ம் தேதி நடைபெறுகிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் தொடர்ச்சியாக, 41 நாட்கள் நடைபெறும் பூஜைதான் மண்டலபூஜை. இந்த நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா, 1973-ல் தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது மண்டலபூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டலபூஜை நாளிலும் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும். பத்தணந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி, ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன், பவனியாக எடுத்து வரப்படுகிறது. சபரிமலை மாதிரியில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் அங்கி வைக்கப்பட்டு, வழிநெடுகிலும் பக்தர்களுக்கு தரசனம் வழங்கி இந்த பவனி பம்பை வந்தடையும்.
நேற்று அதிகாலை, 5:00 மணி முதல், கோயில் முன், இந்த அங்கி பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசசையில் நின்று தரிசனம் நடத்தினர். பின், 6.30 -க்கு அங்கி சபரிமலை மாதிரி ரதத்தில் வைக்கப்பட்டது. காலை, 7:00மணிக்கு பவனி புறப்பட்டது. நேற்று இரவு, ஓமல்லூர் பகவதி கோயிலில் இந்த பவனி தங்கியது, இன்று காலை இங்கிருந்து புறப்படும் பவனி இரவு கோந்நி முருங்கமங்கலம் கோயிலில் தங்குகிறது; நாளை காலை இங்கிருந்து புறப்படும் பவனி இரவு பெருநாடு சாஸ்தா கோயிலில் தங்குகிறது. 25-ம் தேதி, மதியம் பம்பை வந்தடையும். பம்பை கணபதி கோயில் அருகில் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும் இந்த அங்கி மாலை, 3:00 மணிக்கு, தலைச்சுமையாக, சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும். மாலை, 6:30 மணிக்கு தங்கஅங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். 26-ம் தேதி மண்டலபூஜை நேரத்திலும் ஐயப்பனுக்கு இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும். தங்கஅங்கி பவனிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மண்டலபூஜைக்கு, இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன.. சரங்குத்தியில் அங்கிக்கு வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் இன்று வருகின்றனர்.