எந்த அமாவாசை என்றாலும் நினைவுக்கு வரும் தலம் ராமேஸ்வரம். ராமேஸ்வரம் போய் குளிக்காதவன் போல என்ற பழமொழி இந்த தலத்தின் மகிமையை எடுத்துச் சொல்கிறது. ராமரால் பூஜிக்கப்பட்ட சிவன் என்பதால், இங்கு மூலவர் ராமநாதர் எனப்படுகிறார். அயோத்தி மன்னராக முடிசூட்டிக் கொண்ட ராமர், மீண்டும் ராமேஸ்வரம் வந்து நீராடியதாக ஆனந்த ராமாயணம் கூறுகிறது. குழந்தை இல்லாமல் வருந்திய ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெற்றோர், இங்கு வழிபட்ட பிறகே அந்த பாக்கியம் கிடைக்கப் பெற்றனர். காசி செல்பவர்கள், ராமேஸ்வரம் வந்து நீராடினால் தான் யாத்திரை பூர்த்தியாகும் என்பர். தைஅமாவாசையன்று, இங்கு நீராடி, பிதுர் தர்ப்பணம் செய்வது பலமடங்கு புண்ணியத்தைத் தரும்.