திருநெல்வேலி மாவட்டத்தில் பாயும் புனிதநதி தாமிரபரணி. இந்த நதியிலுள்ள முதல் தீர்த்தம் பாபநாசம் அருகிலுள்ள பாணதீர்த்தம். அம்பில் புறப்படும் பாணம்போல வேகமாக விழுவதால், இப்பெயர் பெற்றது. இதற்கு வானதீர்த்தம் என்றும் பெயருண்டு. சாஸ்தா கோயில்களில் முதல் கோயிலான சொரிமுத்தையனார் கோயில், தாமிரபரணி ஆற்றின் நடுவில் உள்ளது. அகத்தியருக்கு சிவன் கல்யாண கோலத்தைக் காட்டிய இடத்திலுள்ளது கல்யாணி தீர்த்தம். இத்தீர்த்தத்தைப் பார்த்தாலே பாவம் தீரும் என்பர். கல்யாணி தீர்த்தத்தில் இருந்து வரும் தண்ணீர், மலைப்பாறையை கடந்து அகத்தியர் அருவியாக விழுகிறது. இதில் நீராடுவதும் சிறப்பானது. தை அமாவாசை நாளில், இந்த தீர்த்தங்களிலும், பாபநாசநாதர் கோயில் வாசலிலுள்ள படித்துறை ஆற்றிலும் நீராடி, பிதுர்தர்ப்பணம் செய்வதால் பாவம் நீங்கும். கங்காதேவியே தன் பாவம் தீர, இங்கு நீராடியதாக தலவரலாறு கூறுகிறது.