பதிவு செய்த நாள்
02
ஜூலை
2014
02:07
நாகர்கோவில் : தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் வழிபடச் செல்லும் பக்தர்களிடம் பூஜை பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், அதனையும் அரசே ஏற்று மலிவு விலையில் வழங்க வேண்டும் என்று ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களிலும் மலிவு விலை பூஜை பொருட்கள் வழங்கும் அங்காடிகள் தொடங்க உத்தரவிட்டார். இதனை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் உடனடியாக செயல்படுத்தும்படி அனைத்து கோவில்களுக்கும் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி குமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், திருப்பதி சாரம் திருவாழ்மார்பன் கோவில் ஆகிய 4 கோவில்களில் மலிவு விலை பூஜை பொருள் அங்காடிகள் தொடங்கப்பட்டது. இங்கு சாமிக்கு அர்ச்சனை செய்வதற்கான தேங்காய், பழம், விபூதி, ஊதுபத்தி, கற்பூரம், குங்குமம், வெற்றிலை, பாக்கு ஆகியவை அடங்கிய பொருட்கள் ஒரு பையில் போடப்பட்டு அளிக்கப்படுகிறது. இதன் விலை ரூ.45 ஆகும். இந்த திட்டம் மற்ற கோவில்களுக்கும் விரைவில் அமல்படுத்த இருக்கிறது.