ஏகாதசியை நித்திய ஏகாதசி, காமிய ஏகாதசி என இரு வகையாகப் பிரிக்கிறார்கள். பிறப்பற்ற நிலை வேண்டும் என்றும், அமைதியான மரணம் வேண்டும் என்றும் வேண்டி அனுஷ்டிக்கப்படுவது நித்திய ஏகாதசி ஆகும். இந்தப்பிறவியில் அனைத்து செல்வங்களும் பெற்று விளங்க வேண்டும் என இறைவனை கேட்பது காமிய ஏகாதசி விரதத்தின் நோக்கமாகும்.
மிகச்சிறந்த ஏகாதசி: மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியைவிட மாசி வளர்பிறையில் வரும் ஏகாதசி மிகவும் சிறந்ததாகும். பாண்டவர்களில் பீமன் எப்போதும் பசியால் துடிப்பான். பலசாலியான அவனுக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் திருப்தி ஏற்படுவதில்லை. எனவே அவனால் ஏகாதசி விரதம் இருக்க முடியவில்லை. துரியோதனன், கர்ணன் போன்றவர்கள் அவனை கேலி செய்தனர். இதனால் மனம் வருந்திய பீமன் வியாசரிடம் ஒரே ஒருநாள் மட்டும் ஏகாதசி விரதம் இருந்து 24 ஏகாதசிகளின் பயனையும் அடைய ஏதாவது வழி இருக்கிறதா என கேட்டான். அதற்கு வியாசர், மாசி மதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி அன்று விரதம் இருந்தால் 24 ஏகாதசி விரதமும் இருந்த பலன் கிடைக்கும் என்றார். எனவே மாசி மாதத்தில் வரும் ஏகாதசிக்கு பீம ஏகாதசி என்றும் பெயர் உண்டு.