பதிவு செய்த நாள்
01
மே
2024
05:05
உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. அனைத்து கிரகங்களிலும் குருவே சுபமான கிரகமாக பார்க்கப்படுகிறார். இன்று மாலை 5:21 மணிக்கு மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார் குரு. ஸ்தான பலத்தை விட பார்வை பலமே குருபகவானுக்கு அதிகம். இன்று குருபகவானை வழிபடுவோம்.. குறையின்றி வாழ்வோம்!
கிருஷ்ண அஷ்டமி திதி, திருவோண நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் மாலை 5:20 மணிக்கு குருபகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பிரவேசிக்கிறார். ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீன ராசியில் பிறந்தவர்களும், புதன்கிழமைகளில் பிறந்தவர்களும், பரிஹாரம் செய்து கொள்ளலாம். அதே போல் கார்த்திகை, ரோகினி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், மகம், பூரம், உத்திரம், சித்திரை, ஸ்வாதி, விசாகம், மூலம், பூராடம், உத்திராடம், அவிட்டம், சதயம், பூட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
தெட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்த விளக்கேற்றி வழிபட வேண்டும். 11 அல்லது 21 விளக்குகள் ஏற்றலாம். தெட்சிணாமூர்த்தியை வலம் வரும்போது 3, 9, 11 ஆகிய முறைகளில் சுற்றிவர வேண்டும். அவருக்கு பிடித்த முல்லை அல்லது மல்லிகை மாலை அணிவித்து, கொண்டைக்கடலை, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் வழிபட வேண்டும்.
விசேஷமான கோலத்தில் தட்சிணாமூர்த்தி திருத்தலங்கள் !
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் மிதித்து, சின்முத்திரை மூலம் ஞானத்தைப் போதித்து சாந்தி மற்றும் ஆனந்தத்தை அருள்பவர் தட்சிணாமூர்த்தி. விசேஷமான திருக்கோலத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கும் திருத்தலங்கள் சிலவற்றைப் பார்ப்போம். மதுரை பழங்காநத்தம் பஸ்ஸ்டாண்ட் அருகே காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவதட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்து அருள் பாலிக்கிறார். புலித்தோலை ஆடையாக அணிந்து, சப்தரிஷிகள் கீழே நிற்க முடிந்த தலையில் கங்கையுடன், வலது கை அபயமுத்திரையுடன் ஜபமாலை, இடது கையில் ஏடு, வலது மேல்கையில் நாகம், இடது மேல்கையில் அக்னி என சிவனே தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மன்னார்குடி - பெருகவாழ்ந்தான் வழியில் 15 கி.மீ. தொலைவிலுள்ள கழுகத்தூர் சௌந்தரநாயகி சமேத ஜடாயுபுரீஸ்வரர் கோயிலின் பிராகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால் 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி - பூம்புகார் வழியில் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலமாகும். இங்கு உள்ள தட்சிணாமூர்த்திக்கு கீழ் சனகாதி முனிவர்களுக்கு பதில் பிரம்மா அமர்ந்த கோலத்தில் உள்ளார். பிரம்மனுக்கு உபதேசம் செய்த இந்த தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.
சென்னை ரெட்ஹில்ஸ் - பெரியபாளையம் சாலையில் அமைந்திருக்கும் திருக்கண்டலத்தில், திருகன்னீஸ்வரர் கோயிலில் பிருகு முனிவரின் பூஜையில் மகிழ்ந்து, இங்குள்ள ஈசன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அன்னை உமையைத் தன் மடியில் தாங்கி அருள்பாலிக்கிறார்.
சென்னையிலிருந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் வழியில் 56 கி.மீ., தூரத்தில் ஆந்திரா சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயில் உள்ளது. தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார்.
பத்து தெட்சிணாமூர்த்திகள்
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்
தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)
சிற்ப அழகு - ஆலங்குடி
வீராசன நிலை - சென்னை திரிசூலம்
மிருதங்க தெட்சிணாமூர்த்தி - கழுகுமலை (தூத்துக்குடி)
யோகாசன மூர்த்தி - அனந்தபூர் (ஆந்திரா)
வீணா தெட்சிணாமூர்த்தி - நஞ்சன்கூடு (கர்நாடகா)
வியாக்யான தெட்சிணாமூர்த்தி - அகரம் கோவிந்தவாடி (காஞ்சிபுரம் அருகில்)
நந்தியுடன் தெட்சிணாமூர்த்தி - மயிலாடுதுறை வள்ளலார் கோயில்
நின்ற நிலையில் வீணையுடன் - திருத்தணி, நாகலாபுரம் வேதநாராயணர் கோயில்.