அந்தர்வேதி என்னும் இடத்தில் பிரம்மா, யாகம் ஒன்றை நடத்த திட்டமிட்டார். யாகத்தை நடத்த தில்லைவாழ் தீட்சிதர்களை அழைத்து வர தன் பிள்ளையான நாரதரை சிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தார். தீட்சிதர்கள் சிதம்பரம் நடராஜப்பெருமானின் ஆனந்த நடனத்தை மறந்து எங்கும் வரமுடியாது என்று மறுத்துவிட்டனர். பிரம்மாவே நேரில் வந்து தீட்சிதர்களை அந்தர்வேதியில் நடக்க இருக்கும் யாகத்திற்கு அழைத்தார். தீட்சிதர்கள் திரும்பி வரும்வரை வியாக்ரபாதரையும், பதஞ்சலி முனிவரையும் நடராஜருக்குப் பூஜைகள் செய்யும்படி பிரம்மா வேண்டிக்கொண்டார். மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவே நேரில் வந்து கேட்டதால் தீட்சிதர்கள் அந்தர்வேதிக்கு புறப்பட்டனர். முதல்நாள் யாகம் தொடங்கிய போது தில்லை தீட்சிதர்கள் நடராஜருக்கு பூஜை செய்ய முடியாமல் போனதை எண்ணி வருந்தினர். அப்போது அந்த யாகத்தீயில் இருந்தே நடராஜர் அவர்களுக்கு காட்சியளித்தார். அந்த நடராஜர் விக்ரஹமும் இப்போது சிதம்பரம் கோயிலில் உள்ளது. அவருக்கு மாணிக்க மூர்த்தி, ரத்தினசபாபதி, ஜோதி நடராஜர் என்று பலபெயர்கள் உண்டு. தினமும் காலை 10மணிக்கு இவருக்கு பால்,தேன், சந்தன அபிஷேகம் நடக்கும். தொடர்ந்து நைவேத்ய தீபாராதனை நடத்தப்படும்.