பதிவு செய்த நாள்
20
செப்
2014
12:09
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரியை அடுத்த சந்தம்பட்டி கிராம மக்கள், ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலுக்கு நடைபயணமாக சென்று வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்த, சந்தம்பட்டி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில், சுமார், 150க்கும் மேற்பட்டோர், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலுக்கு, நடைபயணமாக செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான நடைபயணத்தை துவங்கியுள்ள இப்பகுதி மக்கள், தங்களது குழந்தைகளையும் உடன் அழைத்து செல்கின்றனர்.
திருப்பத்தூர், வேலூர் வழியாக திருப்பதி செல்லும் இவர்கள், நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள், திருப்பதி மலையை அடைந்து, அங்குள்ள வெங்கடாஜலபதியை தரிசனம் செய்து விட்டு, அடுத்த நாள் ஊருக்கு புறப்படுகிறார்கள். தங்களுக்கு தேவையான உணவுகளை, ஆங்காங்கு உள்ள கோவில்கள் மற்றும் முக்கிய புனித தலங்களில் வைத்து சமைத்து சாப்பிடுவதாக கூறும் இவர்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபயணம் சென்று வருவதாக கூறினர்.