பதிவு செய்த நாள்
17
அக்
2014
05:10
பழநி: பழநி மலைக்கோயிலின் பாதுகாப்பை மேலும் பலபடுத்தும் வகையில், படிப்பாதையில் டிஜிட்டல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. உலகப்புகழ்பெற்ற பழநி மலைக்கோயிலுக்கு விழாக்காலங்கள் மட்டுமின்றி சாதாரணநாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலில் வெடிகுண்டுபுரளி, படிக்கட்டுகளில் அமர்ந்து மாமிசம் உண்பது, மது அருந்துவது உட்பட பல்வேறு பிரச்னைகள் காரணமாக மலைக்கோயிலின் பாதுகாப்பை பழநி கோயில் நிர்வாகம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வின்ச் ஸ்டேசன், ரோப்கார், மலைக்கோயில் வெளிப்பிரகாரம், உள்பிரகாரம் மற்றும் உபகோயில்களான திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் டிஜிட்டல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது மலைக்கோயிலின் பாதுகாப்பை அதிகரிக்க படிப்பாதையில் உள்ள பக்தர்கள் நுழைவுபகுதி, வெளியேறும்பகுதி, பாதவிநாயகர் கோயில் என மூன்று இடங்களில் டிஜிட்டல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ச
இவை அனைத்தும் கோயில் தலைமைஅலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளது. கோயில் இணை ஆணையர், உதவிஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களது அலுவலக அறையிலுள்ள எல்.இ.டி., மானிடர் மூலம் பக்தர்களின் வருகை, பாதுகாவலர்கள், பணியாளர்களை கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. கோயில் அதிகாரிகளில் ஒருவர் கூறுகையில், பழநிகோயிலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதவிநாயகர் கோயில் அருகே தடுப்பு அமைத்துள்ளோம். அங்கு மெட்டல் டிடெட்டர் மூலம் பக்தர்கள் முழுமையாக சோதனை செய்யப்படுகின்றனர். தற்போது புதிதாக டிஜிட்டல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போலி கைடுகள், வழிப்பறி திருடர்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும், பணியாளர்களையும் கண்காணிக்க முடியும், என்றார்.