பதிவு செய்த நாள்
24
அக்
2014
01:10
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று(அக்.,24) யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. அக்., 29 ல் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா உலக பிரசித்தி பெற்றது. இந்த விழாவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.
துவக்கம் : கந்த சஷ்டி விழா இன்று துவங்குகிறது. இன்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம். 3 க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 க்கு ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு. 10 க்கு உச்சிகால பூஜை, சிறப்பு அபிஷேகம், மாலை 3.30 க்கு சாயரட்சை, தீபாராதனை நடக்கவுள்ளது.
சூரசம்ஹாரம் : ஆறாம் நாளான அக்., 29 ல் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும். 1.30 க்கு விஸ்வரூப தரிசனம், 2 க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,9 க்கு உச்சிகால பூஜை, மாலை 3.30 க்கு சாயரட்சை, தீபாரதனை நடக்கும். மாலை 4.30 க்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கடற்கரையில் நடக்கும். இதில் எட்டு லட்சம் பக்தர்கள் வருகைதருவார்கள், என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
கண்காணிப்பு கோபுரம் : சூரசம்ஹாரத்தன்று, கடலோர காவல்படை சார்பில் கடலில் மிதவைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் செய்யப்படவுள்ளது. கடற்கரை பகுதியில் போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். திருச்செந்தூர் நகருக்குள் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படவுள்ளது.
ஏழாம் நாள் : அக்., 30 ல் காலை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடு நடக்கும். மாலை 5க்கு சுவாமி மாலை மாற்றுதல் நிகழ்ச்சி, இரவு திருக்கல்யாணம் நடக்கவுள்ளது. இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், அறநிலையத்துறை இணை கமிஷனர் ஞானசேகரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.