பதிவு செய்த நாள்
31
அக்
2014
12:10
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வழிவிடு முருகன், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி, வெளிபட்டணம் பாலசுப்ரமணியசுவாமி, பெருவயல் ரணபலி முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா அக்., 24ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இக்கோயில்களில் அக்., 29 இரவு சூரசம்ஹாரம் நடந்தது. வழிவிடுமுருகன், ரணபலி முருகன் கோயில்களில் நேற்று காலையும், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் மாலையிலும் திருக்கல்யாணம் நடந்நது. பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம், விசாக வழிபாட்டுக்குழு, விழாக்குழுவினர் செய்தனர்.
* பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில், அக்., 24 ல் இரவு காப்புக்கட்டுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது.தினமும் முருகன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மாலை சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று காலை 11:45 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர், அன்னதானம் நடந்தது. இரவு திருக்கல்யாண கோலத்தில் முருகன் வீதியுலா வந்தார். இதே போல் பாரதிநகரில் உள்ள செல்வ குமரன் ஆலயத்தில் சூரசம்ஹாரமும், திருக்கல்யாணமும் நடந்தன. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.