விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், சேலம் ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கு எல்லை தெய்வமாகவும், இஷ்டதெய்வமாகவும் விளங்குபவர் வீரபயங்கரம் அய்யனார். இக்கோவிலில் ஆடிமாதக் கடைசி வெள்ளிக்கிழமையில் நடைபெறும் அய்யனார் ஊர்வலம் மிகப் பிரசித்தமானது. இவ்வூர்வலத்தின்போது முஸ்லிம்கள் சாமிக்கு முதல் மரியாதை செய்வது சிறப்பு. இதனால் இப்பகுதியில் மதம் கடந்த சகோதரத்துவம் நிலவுகிறது. இங்கிருந்து 3 கி.மீ.க்கு தொலைவிலுள்ள கூகையூருக்கு செல்லும் ஊர்வலத்தில் முஸ்லிம் அன்பர்கள் பலரும் சாமியை தோளில் சுமந்து வந்து, அங்குள்ள முஸ்லிம் தர்காவில் இறக்கி வைத்து, மரியாதை செய்கின்றனர். அவர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்டு அய்யனார் வீர பயங்கரம் திரும்புவார். அய்யனாருக்கு பூஜை போட்டு கூகையூர் வரை ஊர்வலம் சென்று திரும்பி வருவதற்குள் மழை பொழிந்து விடும் என்பது நம்பிக்கை.