பதிவு செய்த நாள்
10
ஜூன்
2011
10:06
அழகர்கோவில் : அழகர்கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயில் மூலவர் சன்னதி தங்க கோபுரத்திற்கு ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் 25 கிலோ எடையில் தங்கத் தகடுகள் ஒட்டும் பணி முடிந்தது. இந்து கோயில்கள் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அதன்படி கும்பாபிஷேகம் செய்ய அறங்காவலர்கள் முடிவு செய்து 2007ம் ஆண்டு பாலாலயத்துடன் பணிகள் துவக்கப்பட்டது. கோயில் பிரகாரங்கள், மண்டபங்கள், மேற்கூரை அனைத்தும் புதுப்பிக்கப்பட்டன. கோபுரங்கள், சன்னதிகள் வர்ணம் பூசப்பட்டன. கோயில் மூலவரான பரம சுவாமி சன்னதி விமானம் உள்ளது. பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் பல மன்னர்கள் அழகர்கோயிலுக்கு பல்வேறு திருப்பணிகளை செய்தனர். ஜடாவர்ம பாண்டியன் (1251-1270) அழகர்கோயில் மூலவர் சன்னதி மேல் உள்ள சோமசந்த விமானத்திற்கு தங்க முலாம் பூசிய தகடுகளை பதித்தார்.
அதன் பிறகு தங்க விமானம் புதுப்பிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் நடந்த கும்பாபிஷேகத்தின்போது மராமத்து மட்டும் செய்யப்பட்டது. கோபுரத்தில் ஆங்காங்கே துவாரங்கள் ஏற்பட்டிருந்தது. புதிதாக பதவியேற்ற அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி மற்றும் அறங்காவலர்கள் தங்க கோபுரத்தை முற்றிலும் புதுப்பிக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். அறநிலையத் துறையில் அனுமதி கிடைத்ததும் கோபுரத்தை புதுப்பிக்க மதிப்பீடு செய்யப்பட்டது. முதலில் முலாம் பூசுவதற்கு 15 கிலோ தங்கம் தேவைப்படும் என்றனர். இதற்கு தேவையான தங்கம் பக்தர்களிடம் இருந்து உபயமாக பெறப்பட்டது. மேலும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கமும் சேர்க்கப்பட்டது. கோபுரம் பிரிக்கப்பட்ட போது அதன் சுற்றளவு 900 சதுர அடிக்கும் மேல் இருந்தது. இதனால் கையிருப்பில் உள்ள தங்கம் போதாது என்பதால் மேலும் 10 கிலோ தங்கம் தேவை என கோயில் நிர்வாகத்தினர் அறநிலையத் துறையிடம் கோரிக்கை விடுத்தனர். கமிஷனர் சம்பத் தங்க விமானத்தை ஆய்வு செய்து கூடுதல் தங்கத்தை கோயில் நிதியில் இருந்து பெற்றுக் கொள்ள உத்தரவிட்டார். திருக்கோஷ்டியூர் சாரிட்டபில் டிரஸ்ட் சார்பில் 6.400 கிலோ தங்கம் வழங்கப்பட்டது. மீதி தங்கம் கோயில் நிதி, உபயதாரர்கள் மூலம் பெறப்பட்டது. விமானம் புதுப்பிப்பதற்கு தேவையான தங்கம் கையிருப்பில் இருந்ததை தொடர்ந்து பணிகள் வேகமாக நடந்தது. தற்போது 800 ஆண்டுகளுக்கு பிறகு அழகர்கோயில் மூலவர் தங்க விமானம் முற்றிலும் பிரிக்கப்பட்டு முலாம் பூசப்பட்டுள்ளது. இதற்கு 25 கிலோ தங்கம் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ஐந்து கோடி ரூபாயாகும். கும்பாபிஷேகப் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.