பதிவு செய்த நாள்
17
டிச
2014
05:12
இமாசலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில், ஜகு மலையின் உச்சியில் அமைந்துள்ள 108 அடி உயரமுள்ள அனுமன் சிலை, சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில், 2010ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. மலைமீது அமைக்கப்பட்ட சிலைகளில், உலகிலேயே மிக உயரமானது என்று கருதப்படுவது பிரேசில் நாட்டில், ரியோடி ஜெனிரோவில் உள்ள யேசுகிறிஸ்துவின் சிலை. இது கடல் மட்டத்திலிருந்து 2,296 அடி உயரத்தில் 98 அடி உயர சிலை. இங்குள்ள அனுமன் சிலை அதை விட அதிகமான உயரத்தில் அமைந்துள்ளது. அதாவது, கடல் மட்டத்திலிருந்து 8,000 அடி உயரத்தில் 108 அடி உயரம் கொண்டதாக அமைந்திருக்கிறது. செல்லும் வழியெல்லாம், மலையைப் போர்த்தினால் போல் வளர்ந்துள்ள பசுமை நிறக் காடுகளும், நீண்ட நெடுந்தொலைவுக்கு அமைந்த பனிபடர்ந்த மலைகளும், உயரே பிரம்மாண்டமாக விரிந்து பரந்த நீல ஆகாயமும் கண் கொள்ளாக் காட்சிகளாகும். இந்த மலைக்கோயில் மிகவும் புராதனமானது. இது திரேதா யுகத்திலிருந்து உள்ளதாக நம்பப்படுகிறது. வடஇந்தியப் பகுதிகளில் மகாவீர் என்றும், ஹனுமன்ஜி என்றும் போற்றப்படும் அனுமனின் இந்த கோயிலுக்கு, பக்தர்கள் மட்டுமல்ல; சுற்றுலாப் பயணிகளும் பெருந்திரளாக வருகிறார்கள்.