அரவணை வினியோகத்தில் கட்டுப்பாடு: ஒருவருக்கு 10 டின் மட்டுமே !
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2014 12:12
சபரிமலை: தரக்கட்டுப்பாடு சோதனையால் உற்பத்தி குறைந்ததை தொடர்ந்து சபரிமலையில் அரவணை வினியோகத்தில் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கு 10 டின் அரவணை மட்டுமே வழங்கப்படுகிறது.
சபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதம் அரவணை. ஒரு டின் அரவணை 60 ரூபாய். ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்த நெய் இதில் பயன்படுத்தப்படுகிறது. நடப்பு மண்டல சீசன் கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கியது என்றாலும் அக்டோபர் இறுதியிலேயே அரவணை தயாரிப்பு தொடங்கி விட்டது. சீசன் தொடங்குவதற்குள் 25 லட்சம் டின் அரவணை ஸ்டாக் செய்யப்பட்டது. ஒருநாள் சராசரியாக 50 ஆயிரம் டின்னுக்கும் அதிகமான அரவணை விற்பனையானது. இதனால் ஸ்டாக் குறைந்து விட்டது. அதே நேரத்தில் ஸ்டாக் குறைந்ததற்கு ஈடாக அரவணை உற்பத்தி ஆகவில்லை. காரணம் தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் அரவணையை தொடர்ந்து பரிசோதனை செய்து வருவதால், அரவணை ஸ்டாக் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு நாள் இரண்டு லட்சம் டின் வரை உற்பத்தியாக வேண்டிய இடத்தில் தற்போது 1.20 லட்சம் டின் அரவணை மட்டுமே உற்பத்தியாகிறது. சர்க்கரையில் உள்ள இனிப்பை பொறுத்து 16 சதவீதம் வரை நீர்தன்மை இருக்கலாம் என்றும் அதனால் பாதிப்பு இருக்காது என்பது தேவசம்போர்டின் வாதம். ஆனால் அதை உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. இதை தொடர்ந்து தேவசம்போர்டு அதிகாரிகள் ஐகோர்ட்டை அணுக முடிவு செய்துள்ளனர். அரையாண்டு தேர்வுகள் முடிந்து 23ம் தேதி முதல் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் என்பதால், அந்த நாட்களில் அரவணை இல்லை என்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் தற்போது கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.