பதிவு செய்த நாள்
18
டிச
2014
01:12
விருத்தாசலம், சனிப் பெயர்ச்சியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் உள்ள நவக்கிரக சன்னதியில் சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.மார்கழி 1ம் நாளான நேற்று முன்தினம் பிற்பகல் 2:50 மணிக்கு சனீஸ்வர பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசித்தார்.
இதையொட்டி, விருத்தாசலத்தில் சனிப் பெயர்ச்சி பரிகார சனீஸ்வர மகா யாகப் பெருவிழா, கடந்த 15ம் @ததி காலை கணபதி, கோ பூஜையுடன் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் சனீஸ்வர பகவானுக்கு தீபாராதனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு ஒன்பது கலசங்கள் வைத்து பரிகார சங்கல்பம், நவக்கிரஹ ஹோமம், முதல் கால பூஜை நடந்தது.தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு சங்கல்ப பரிகார மகா யாகம், பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, பரிகார பூஜை நடந்தன.
விருத்தகிரீஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள் பரிகார ராசிகள், நட்சத்திரங்களுக்கு பூஜை செய்தனர்.விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. சனி பகவானுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்தும், எள், நெய் தீபமிட்டும் வழிபட்டனர். தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரி உடனுறை ஆதிசக்தீஸ்வரர், கருவேப்பிலங்குறிச்சி ரோடு ஏகநாயகர், மு.பரூர் அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர், பெண்ணாடம் அழகிய காதலியம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில்களிலும் சனிப் பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது.