பதிவு செய்த நாள்
19
டிச
2014
11:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாயார் குளத்தில், நேற்று காலை நுாற்றுக்கணக்கான மீன்கள் திடீரென செத்து மிதந்தன. இதனால்,
இப்பகுதியை சுற்றிலும் துர்நாற்றம் வீசியது. காஞ்சிபுரம் தர்மலிங்கேஸ்வரர் நகரில், தாயார் குளம் உள்ளது. இந்த குளம், கச்சபேஸ்வரர் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்டது. இந்த குளத்தை சுற்றிலும் உள்ள 110 குடும்பங்களில், 700 பேர் வரை வசித்து வருகின்றனர். அப்பகுதிவாசிகள் இந்த குளத்தை, துணி துவைக்கவும், சடங்குகள் செய்யவும் பயன்படுத்தி வந்தனர்.
நேற்று காலை, இந்த குளத்தின் இரு கரைகளிலும், நுாற்றுக் கணக்கான மீன்கள் திடீரென செத்து மிதந்தன. இதனால், இப்பகுதியை சுற்றிலும் துர்நாற்றம் வீசியது. இதனால், இப்பகுதிவாசிகளால் குளத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற் பட்டுள்ளது. இதுகுறித்த புகாரை அடுத்து, மீன்கள் அகற்றும் பணியில் காஞ்சிபுரம் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், குளத்தில் மீன்கள் இறப்பிற்கு காரணம் தெரியவில்லை. மீன்களை அகற்றி, பிளீச்சிங் பவுடர் துாவிஉள்ளோம் என்றனர்.