பதிவு செய்த நாள்
27
டிச
2014
10:12
மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள்.
திருப்பாவை பாடல் 12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: பசியால் கதறித் திரியும் கன்றுகளை எண்ணிய எருமைகள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அலைகின்றன. அந்தப் பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகிறது. இப்படி செழுமை மிக்க எருமை மாடுகளுக்கு உரியவனான ஆயனின் தங்கையே! கொட்டும் பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு வாசலில் காத்து நிற்கிறோம். ராவணனின் மீது கோபம் கொண்டு, அவனை அழிக்க ராமனாய் அவதரித்த கோமானான நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் எழாமல் இருக்கிறாய். அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன் பேருறக்கம்?
திருவெம்பாவை பாடல் 12
ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்
பொருள்: தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் சக்தியுள்ளவனும், கங்கையைத் தலையில் சூடியவனும், சிதம்பரத்தில் அக்னியுடன் நடனமாடும் கலைஞனும், வானம், பூலோகம், பிற உலகங்களைக் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடல் புரிபவனுமான சிவனை, நம் வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் ஆர்பரிக்கவும், பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்வோம். அவனது பொற்பாதத்தை வணங்கி துதிப்போம்.