மூணாறு பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள், கிறிஸ்துமஸ் தினத்தன்று கோயில்களில் திருவிழாக்களை நடந்தும் வினோத வழக்கம் உள்ளது. இதனை கடந்த ஒரு நூற்றாண்டாக கடை பிடித்து வருகின்றனர்.
மூணாறு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயர்கள் நிர்வாகித்து வந்தனர். இவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு வசதியாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளித்தனர்.அப்போது தொழிலாளர்கள் அந்தந்த பகுதிகளில் கோயில்களை அமைத்து வழிபட்டனர்.
இந்த வழக்கம் கடந்த ஒரு நூற்றாண்டாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துஸ் பண்டிகை நெருங்கவதற்கு முன்பு வீடுகளை சுத்தம் செய்து, குறைந்த பட்சம் ஒரு மாதம் விரதம் இருந்து, கிறிஸ்துமஸ் தினத்தன்று நடத்தப்படும் கோயில்களில் திருவிழாவில் நையாண்டி மேளமும், கரகாட்டமும் கண்டிப்பாக இடம் பெறும்.இதற்காக தமிழகத்தில் இருந்து கரகாட்ட கலைஞர்கள் வரவழைக்கப்படுவர்.
இதே ரீதியில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று மூணாறைச் சுற்றிலும் உள்ள எஸ்டேட்டுகளில் தொழிலாளர்கள் கோயில்களில் திருவிழாக்களை உற்சாகத்துடன் நடத்தினர். மூணாறு அருகே கன்னிமலைஎஸ்டேட் டாப் டிவிஷனில் உள்ள கன்னியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவின்போது பால்குடம், தீச்சட்டி, பறவை காவடி, முளைப்பாரி எடுத்தும், தீ மிதித்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்