பதிவு செய்த நாள்
30
டிச
2014
10:12
சபரிமலை: மகர விளக்கு கால பூஜைக்காக, சபரிமலை நடை மாலை திறக்கப்படுகிறது. வரும், 20ம் தேதி காலை வரை நடை திறந்திருக்கும். மண்டல கால பூஜை முடிந்து, சபரிமலை நடை டிச., 27ம் தேதி இரவு அடைக்கப்பட்டது. அதன்பின் சன்னிதானத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
சன்னிதானத்திலும், பம்பையிலும் துப்புரவு பணிகள் நடந்தன. மாதா அமிர்தானந்தமயி மடத்தைச் சேர்ந்த, 1,000 தன்னார்வ தொண்டர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். தேவசம்போர்டு மகரவிளக்கு காலத்துக்கு தேவையான பொருட்களை சன்னிதானம் கொண்டு வந்தனர். இன்று மாலை, 5:30 மணிக்கு, மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு விசேஷ பூஜைகளின்றி, இரவு, 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனத்துக்கு பின், மகரவிளக்கு கால நெய்யபிஷேகத்தை தந்திரி கண்டரரு ராஜீவரரு துவங்கி வைப்பார். ஜன., 18ம் தேதி பகல் 11:30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். இன்று மாலை திறக்கப்படும் நடை, ஜன., 20ம் தேதி காலை, 6:30 மணி வரை திறந்திருக்கும். 19ம் தேதி இரவு நடை அடைக்கும் வரை பக்தர்கள் தரிசனம் நடத்தலாம். 20ம் தேதி காலை, 5:00 மணிக்கு நடை திறந்து, 6:30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படும்; அன்று, பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடையாது.