பதிவு செய்த நாள்
30
டிச
2014
12:12
உருக்கு கரமிருக்கு! உயர்ந்து நிற்கஉள்ளத்தில் வலுவிருக்கு!
குரு பகவானை ஆட்சி கிரகமாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
நீங்கள் ஆன்மிக செயல்பாடுகளில் அதிகமாக ஈடுபடுவீர்கள். கடந்த ஆண்டு இறுதியில் குரு பகவான் பல்வேறு முன்னேற்றங்களை தந்திருப்பார். எந்த பிரச்னையையும் முறியடிக்கும் வல்லமையை கொடுத்திருப்பார். இந்த ஆண்டு குருபகவான் 8-ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. பொதுவாக மன வேதனையும், நிலையற்ற தன்மையும் கொடுப்பார். பொருளாதாரச் சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார். இந்த நிலை ஜூலை துவக்கம் வரை தான். மேலும், குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும், அதை குரு பார்வை முறியடித்து
வெற்றிக்கு வழிவகுக்கும். அதாவது சவாலுக்கு சவால் விடுவீர்கள். இப்போது சனி பகவானும் 12-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். அவரால் நற்பலனை எதிர்பார்க்க முடியாது. பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம் . இதற்காக நீங்கள் அஞ்ச வேண்டாம். காரணம் சனியின் 7-ம் இடத்து பார்வை மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தை கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும்.
நிழல் கிரகமான ராகு தற்போது 10-ம் இடமான கன்னியில் இருக்கிறார். அங்கு பொல்லாப்பையும், பெண்கள் வகையில் தொல்லைகளையும் தரலாம். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது 4-ம் இடமான மீனத்தித்தில் உள்ளார். அங்கு அவர் உங்களை தீயோர் சேர்க்கைக்கு ஆளாக்கி தொல்லைகளை தரலாம். ஆகா! இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நீங்கள் நினைக்கிற வேளையில், இதற்காக கொஞ்சம் கூட பயம் கொள்ளத் தேவையில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு சம்பவம்.சீதாபிராட்டிக்கு குரு பகவான் அவளது ராசியிலேயே ஒரு சமயம் அமர்ந்தார். அதாவது ஜென்ம குரு காலம். ஜென்ம குரு காலத்தில் சீதை வனத்திலே என்பார்கள். ஆம்..அவள் ராவணனால் கடத்தப்பட்டு அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டாள். அவள் என்ன சாதாரணமானவளா! லட்சுமி தாயாரின் அவதாரம். அவள் நினைத்திருந்தால், வீரலட்சுமியாய் மாறி, ராவணனை அந்தக் கணமே அழித்திருக்க முடியும். ஆனால், தன்னைக் கொண்டு உலகத்துக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்தாள். தனக்கு வந்த சோதனைகளைத் தாங்கிக் கொண்டாள். ராமபிரான் அவளைத் தேடி அலைந்த போது, சுக்ரீவன், அனுமன், விபீஷணன் போன்ற நல்லவர்களின் நட்பையெல்லாம் பெற்றார். அவர்களின் உதவியோடு சீதையை மீட்டார். அவரோ, திருமாலின் அவதாரம். அவரது கண்ணசைவில் ராவணன் மாண்டு விடுவான். இருப்பினும், மனிதனாகப் பிறந்து விட்டதால், அவனுக்கே உரித்தான சோதனைகளை சந்தித்தார். அவற்றை நல்லவர்கள் உதவியோடு வெற்றி கொண்டார்.அந்த ராமனுக்கே உரித்தான வில்லும், அம்புமே உங்கள் ராசியின் சின்னம். பிறகென்ன! சோதனைகளை தைரியத்துடன் சந்திப்பீர்கள். அவற்றை வென்று சாதனையும் படைப்பீர்கள்.
ஆக, மேற்கண்ட கிரகநிலையில், இந்த ஆண்டு முழுமைக்குமான விரிவான பலன்களைக் காணலாம். செலவுகள் அதிகரித்தாலும் அதை ஈடுகட்டும் வகையில் வருமானம் வரும். மதிப்பு, மரியாதை சுமாராகத் தான் இருக்கும். வீண் விரோதத்தை தவிர்க்கவும். குரு ஜூலை 6 முதல் டிசம்பர் 21 வரை நன்மை தருவார். எந்த ஒருசெயலையும் வெற்றிகரமாக நிறைவேற்றலாம். தடைகள் அகலும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு மேலோங்கும். அக்கம் பக்கத்தினர் உங்களை புகழ்வர். மேலும் சனி ஜூன் 12 முதல் செப்டம்பர் 5 வரையிலும் வக்கிரம் அடைகிறார். இந்த காலக்கட்டத்தில் கெடுபலன்கள் நடக்காது.குடும்பம்குடும்பம் ஒன்று சேரும். ஆனாலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தம்பதிகளிடையே அவ்வப்போது கருத்துவேறுபாடு வரத்தான் செய்யும். அனுசரித்து போவது நல்லது. குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். உறவினர்கள் மத்தியில் அவ்வப்போது சிற்சில மனக்கசப்புகள் வரலாம். அவர்களிடம் அனாவசிய பேச்சைத் தவிர்க்கவும். ஜூலை 6முதல் குடும்ப நிலைமை மேம்படும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். அவர்களது படிப்புத்திறமை கண்டும், விளையாட்டு போன்றவற்றில் மிளிர்வது கண்டும் மனம் மகிழ்வீர்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக நடக்கும். அதற்கான தொகைக்கு சிறிது சிரமம் இருந்தாலும், முன் பின் தெரியாத ஒருவர் கூட கடனுதவி செய்கிற வகையிலே நிலைமை அமைந்து விடும்.
தொழில், வியாபாரம்தொழில் சீராக நடக்கும். உழைப்புக்கு தகுந்த லாபம் இருக்கும். பகைவர்களின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். சிலரிடம் வீண் விரோதம் வர வாய்ப்பு உண்டு. எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பேசவும். அரசிடம் இருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்காமல் போகலாம். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். இருக்கிற முதலீட்டைக் காப்பாற்றுகிற வகையிலும், அதிலிருந்தே அதிக வருமானம் பெறும் வகையிலும் நீங்கள் அதிகபட்ச உழைப்பைச் சிந்தினாலே போதும். நிலைமை உங்கள் கட்டுக்குள் இருக்கும். பணியாளர்கள்வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சலும் இருக்கும். சிலர் பொறுப்புகளை இழக்க நேரிடலாம். கவனம் தேவை. உங்கள் கோரிக்கைளை தீவிர முயற்சி எடுத்து நிறைவேற்றிக் கொள்ளவும். மேலும் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் வேலை காரணமாக குடும்பத்தைவிட்டு தற்காலிகமாக பிரிய வேண்டியிருக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு வேலையில் பிரச்னை குறையும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். நிறுவனத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஒத்துழைக்க மறுத்த சக ஊழியர்கள், உங்கள் சொல்லுக்கு மதிப்பளிப்பார்கள்.
கலைஞர்கள்முயற்சி எடுத்தால் தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பாராட்டு புகழை விட பொருளாதார வளத்தில் மேம்பாடு காண்பீர்கள். இதை சுபச்செலவுகளுக்கு பயன்படுத்துவதன் மூலம், தேவையின்றி பணம் கரைவதைத் தடுத்து விடலாம்.
அரசியல்வாதிகள்அரசியல் எதிரிகள் கடுமையாக மோதுவர். ஆனால், அவர்களின் ஜெகஜாலமெல்லாம் ஜூன் வரை தான். ஜூனுக்குப் பிறகு புதிய பதவி கிடைக்கும். வெளிநாடு சென்று வரலாம். சில சமயங்களில் கடும் உழைப்பும் பலனின்றிப் போகும். அதற்கு இடம் கொடுக்காத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.
மாணவர்கள்நடப்பு கல்வியாண்டில் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும், அதே நேரம் குருவின் பார்வை சிறப்பாக அமைந்திருப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். அடுத்த கல்வி ஆண்டில் அதிக மார்க் பெற்று வெற்றி பெறலாம். விளையாட்டிலும் ஜொலிக்கலாம். விரும்பிய கல்லுõரியில் விரும்பிய பாடத்தில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
விவசாயிகள்ஆண்டின் ஆரம்பத்தில் சுமாரான மகசூலைக் காண்பர். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். ஜுன் மாதத்தில் புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. மகசூல் அதிகரிக்கும். வழக்கு விவகாரங்களில் பாதகமான தீர்ப்பு வர வாய்ப்பு உண்டு. எனவே சமாதானமாக போக முயற்சி செய்யவும்.
பெண்கள்ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். ஜூன் மாதத்திற்கு பிறகு மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். உடல்நலம் சிறப்படையும்.
பரிகாரப் பாடல்: காராய் வண்ண மணிவண்ண கண்ணகண சங்கு சக்ர தர நீள்சீர்வாய துõய மலர்வாய நேய
ஸ்ரீராம ராமன் எனவேதாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்கதாமோ தரயா நமவோம்நாராயணா நம வாமனாய
நமகேச வாய நமவே.
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்க தவறாதீர்கள். ஏழைகள் படிக்க இயன்ற பொருள்உதவி செய்யுங்கள். சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கலாம். முதியோர் இல்லத்துக்கு உதவி செய்யலாம். ஏழுமலையானை விரதமிருந்து தரிசனம் செய்து வாருங்கள். ராமரை வழிபடுவதன் மூலமும், ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை தினமும் 108 தடவை சொல்வதன் மூலமும் எந்தச் சோதனையையும் வெற்றி கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.