திருப்பதி திருமலையில் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி திருவிழா களைகட்டியது பக்தர்கள் பல இடங்களிலும் இருந்து வந்து குவிந்துள்ளனர். பதினாறு வருடத்திற்கு பிறகு திருமலையில் வைகுண்டஏகாதசியும் புத்தாண்டும் சேர்ந்து வருவதால் வழக்கமாக வரக்கூடிய கூட்டத்தை விட பக்தர்கள் கூட்டம் இரு மடங்கு அலைமோதியது. இதை எதிர்பார்த்து தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது.
புத்தாண்டு நாளான காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தர்ம தரிசன வரிசையில் நிற்பவர்கள் மூலவரான சீனிவாசப்பெருமாளை தரிசிக்க பத்து மணி நேரம் முதல் பனிரெண்டு மணி நேரம் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்ப்படுகிறது. வருடத்தில் வைகுண்ட ஏகாதசி மற்றும் மறுநாள் வரும் துவாதேசி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே கோவிலுனுள் உள்ளே உள்ள வைகுண்டவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். விழாவினை முன்னிட்டு கோவில் கோபுரங்கள் மற்றும் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.