பதிவு செய்த நாள்
04
பிப்
2015
02:02
சேலம்,:தைப்பூசத்தை முன்னிட்டு, சேலம் முருகன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜை, வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.தைப்பூசத்தை முன்னிட்டு, நேற்று சேலம் கந்தாஸ்ரம குருகுல பிரார்த்தனை மண்டபத்தில், ஞானஸ்கந்த குருநாதர், ஸ்கந்தமாதா, சந்தானந்த ஸ்வாமிகள், இடும்பன் ஸ்வாமிக்கு விசேஷ அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, கணபதி ஹோமம், சேலம் சாய் சத்சங்கத்தின் சாய் பஜனை, மாலையில் வீணை வாத்திய கச்சேரி, இரவில் தீபாராதனை ஆகியன நடந்தது, இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
சேலம், ஜாகீர்அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில், நேற்று காலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டு, கோமாதா பூஜை, விஸ்வரூப தரிசனம், விசேஷ அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், தங்க கவச சாத்துபடியில் பக்தர்களுக்கு பழனியாண்டவர் அருள் பாலித்தார். இரவில் பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
* மகுடஞ்சாவடி சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், நேற்று காலையில் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் மாரியம்மன் கோவிலில் இருந்து காவடிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சிறப்பு தீபாராதனை, அன்னதானம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை, செட்டிச்சாவடி முருகன் கோவிலில், நேற்று காலையில் நடந்த சிறப்பு அபிஷேகம், பூஜைகளில் வியாபாரிகள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து, பால்குடம், காவடி ஊர்வலத்தில் திரளாக பெண்கள் கலந்து கொண்டனர்.
சேலம், அம்மாபேட்டை குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், குமரகிரி தண்டபாணி கோவில், ஊத்துமலை பாலசுப்பிரமணியன் கோவில், பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில், ஏற்காடு அடிவாரம் அறுபடை முருகன் கோவில், ஆத்தூர், வடசென்னிமலை பாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் மட்டுமின்றி சேலம் மாநகர், புறநகரில் உள்ள சிவன் கோவில்களில் தனி சன்னதிகளில் அருள் பாலிக்கும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.