பதிவு செய்த நாள்
20
பிப்
2015
03:02
திருமலை – திருப்பதிக்கு உறக்கம் என்பதே இல்லை. நள்ளிரவில் ‘ஏகாந்த சேவை’ முடிந்து, நடை சாத்திய சிறிது நேரத்திலேயே, அடுத்த நாளின் முதல் சேவையான ‘சுப்ரபாத சேவை’ அதிகாலை 3 மணிக்கு தொடங்கிவிடுகிறது. தினம்தோறும் அதிகாலையில் திருப்பதி-திருமலையில் நடை திறக்கும் போது பதிவு செய்யப்பட்ட ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்தை இசைக்க விடுகிறார்கள் தேவஸ்தானத்தார். இந்த வேளையில் நடைபெறும் தரிசனத்துக்கு, ‘சுப்ரபாத தரிசனம்’ என்று பெயர். சுமார் 200-லிருந்து 250 பக்தர்கள் வரை இந்த தரிசனத்துக்கு அனுமதி உண்டு. இதற்கான முன்பதிவை, ஆன்லைனிலும் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
‘சுப்ரபாத சேவை’ தரிசனம் அரை மணி நேரம் மட்டுமே. இந்த சேவையின் முடிவில், வாத்திய முழக்கங்களுடன் ஸ்ரீவேங்கடவனின் கருவறைக்கு முன்னால் உள்ள தங்கக் கதவுகள் திறக்கப்படும். திருமலா ஸ்ரீமடத்தின் ராமானுஜ ஜீயர் கற்பூரத்தை ஏற்றி கருவறையில் இருக்கும் பிரதான அர்ச்சகரிடம் தருவார். அவர் அதை வாங்கி, மூலவர் ஸ்ரீவேங்கடாசலபதிக்கு ஸ்ரீமந் நாராயணனின் திருநாமங்களை ராகத்துடன் சொல்லி ஆரத்தி செய்வார்.
குலசேகரப்படி வரை பக்தர்கள் ஒவ்வொருவராக நகர்ந்து வந்து ஸ்ரீவேங்கடவனின் விஸ்வரூப தரிசனத்தைக் கண்டு பரவசத்துடன் நகர்வார்கள். ஸ்ரீவேங்கடவனின் கருவறையில் ஒவ்வொரு தினமும் முதன்முதலில் காட்டப்படும் இந்த ஆரத்தியை, கர்நாடக மாநில அரசின் அறநிலையத் துறை ஸ்பான்சர் செய்கிறது. இது இன்று நேற்று இருந்து வரும் வழக்கம் அல்ல… மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்து தொடர்ந்து நடந்து வருகிறது. ஸ்ரீவேங்கடவன் மீது அதீத பக்தி கொண்ட அந்த மன்னர், இப்படி ஒரு கட்டளையைத் தன் காலத்தில் தொடங்கி வைத்து விட்டுப் போனார். அவர் காலத்தில் இருந்து இது தொடர்கிறது. இன்றைக்கும் கர்நாடக மாநிலத்தில் எந்த ஆட்சியாளர் பதவியில் இருந்தாலும், இந்த சேவையை மட்டும், மாநிலத்தின் அறநிலையத் துறை பொறுப்பேற்றுக் கொண்டு, தொடர்ந்து செய்து வருகிறது.
மார்கழி மாதம் மட்டும், திருமலை – திருப்பதியில் பெருமாள் சன்னிதானத்தில் சுப்ரபாதம் ஒலிப்பதில்லை. காரணம் – அந்த ஒரு மாதம் மட்டும் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடப்படுகிறது. இந்த ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் எனும் வைணவப் பெரியவரால் எழுதப்பட்டது. ஐநூறு வருடத்துக்கும் பழமையான மூல ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டும், ஆழ்வார் பாசுரங்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டும், இந்த சுப்ரபாதத்தை இயற்றி இருக்கிறார் இந்தப் பெரியவர். திருமலை – திருப்பதியில் தினமும் காலை வேளையில் கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் தேனினும் இனிய குரலில் சுப்ரபாதம் இசைக்கப்பட்டு வருகிறது. எம்.எஸ். அவர்களின் சுப்ரபாதம் கேட்டுத்தான் ஸ்ரீவேங்கடவன் துயில் எழுகின்றான். இனி காலாகாலத்துக்கும் எம்.எஸ். அவர்களின் குரல்தான் இங்கே ஒலிக்கும். அகில உலகத்தையும், தன் குரலால் கட்டிப்போட்ட அந்த இசை மேதைக்கு, இந்த ஆந்திர அரசாங்கம் கொடுத்த அங்கீகாரம் இது” என்று பெருமைப்படுகிறார் திருப்பதியில் வாழும் அன்பர் ஒருவர்.
ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்தில் மொத்தம் 70 ஸ்லோகங்கள் உள்ளன. இவை நான்கு பகுதிகளாக அமைந்துள்ளன. முதல் பகுதியான சுப்ரபாதம், யோக நித்திரையில் இருக்கும் வேங்கடவனைத் துயில் எழச் செய்வது குறித்ததாகும். இதில் 29 ஸ்லோகங்கள் காணப்படுகின்றன. இரண்டாம் பகுதியான ஸ்தோத்திரம், ஸ்ரீவேங்கடவனை துதி செய்தல் – அதாவது போற்றி வணங்கும் பகுதியாகும். இதில் 11 ஸ்லோகங்கள் உண்டு. மூன்றாம் பகுதியான பிரபத்தி, திருமகளின் பெருமை குறித்தும், ஸ்ரீவேங்கடவன் திருவடிகளில் சரணாகதி அடைவது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் 16 ஸ்லோகங்கள் உண்டு. நான்காவது பகுதியான மங்களம், நிறைவுப் பகுதி. மங்களகரமான அருளை வேண்டும் வகையில் துதிக்கப்படும் இந்தப் பகுதியில், 14 ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.
காலம் காலமாக அதிகாலை 3 மணிக்கு இசைக்கப்படும் இந்த புனிதமான சுப்ரபாதம் கடந்த புதன்கிழமை (18/02/15) அதிகாலை தாமதமாகவே இசைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து கோவில் கோயிலின் துணை நிர்வாக அதிகாரி ரமண்ணா கூறுகையில் கடந்த புதன்கிழமை அதிகாலை 2.15 மணிக்கு சுப்ரபாத சேவையில் ஈடுபடும் அர்ச்சகர்கள் வந்துவிட்டனர். பங்காரு வாசல் எனப்படும் முதல் வாசலின் கதவை திறப்பதில் அப்போது சிறிது சிரமம் ஏற்பட்டது இந்த பிரச்னை நிர்வாகத்திற்கு வந்ததும் கொஞ்சமும் தாமதிக்காமல் கதவு தாழ்ப்பாள் அறுக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டது. கதவு திறப்பதில்தான் தாமதம் ஏற்பட்டதே தவிர மற்றபடி சரியாக 3 மணிக்கு சுப்ரபாத இசை இசைக்கப்பட்டு அதற்கான சேவையும் துவங்கப்பட்டுவிட்டது. இதே போல இலங்கை அதிபர் சிறீசேனாவின் வருகை காரணமாக சுப்ரபாத சேவை சீக்கிரம் முடிக்கப்பட்டதாக வந்த தகவலும் தவறானது. ஆண்டவனை துயில் எழுப்பும் சுப்ரபாத சேவையில் இதுவரை எந்த பிரச்னையும் வந்தது இல்லை இனியும் வரப்போவது இல்லை என்றுகூறினார்.