வடக்கிலுள்ள பெரிய மலையான கைலாய மலையைப் போல், தென்னகத்தில் செயற்கையாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கட்டப்பட்டதே தஞ்சை பெரியகோயில். 216 அடி உயர கல் மலையாக, 2 லட்சம் டன் எடை கொண்ட கற்களால் இந்தக் கோயிலை எழுப்பினான் ராஜராஜ சோழன். கோயிலுக்குராஜராஜேஸ்வரம் என்றும், விமானத்திற்கு தட்சிண மேரு (தெற்கிலுள்ள இமயமலை) என்றும், சுவாமிக்கு பிரகதீஸ்வரர் என்றும் பெயரிட்டான். இதனால் தான் இந்தக் கோயிலை மக்கள் பெரிய கோயில் என்று அழைத்தனர்.இதைக்கட்டுவதற்கான இடம் தேர்வு செய்த நிலையில், பசுக்களை அங்கு மேயவிட்டு அப்பகுதி முழுவதும் கோமியம், சாணத்தால் புனிதப்படுத்தினான். எட்டுத்திசையிலும் பெரிய அளவில் வாஸ்து பூஜை நடத்தினான். கடைக்கால் நடும் போது, கோயில் வளாகத்தில் நெல் பரப்பி அஷ்டதிக் பாலகர்களுக்குரிய பூஜையைச் செய்தான்.