அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில், ஜோதி பண்டிகை விழா நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம், அவலூர்பேட்டையில் ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஜோதி பண்டிகை விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 1ம்தேதி இரவு, கோவிலிலிருந்து, பெரிய குளக்கரைக்கு கட்டமுது செல்லும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து பெரிய குளக்கரையில் காப்பு கட்டுதல், திருமஞ்சனம் கொண்டு வருதல் மற்றும் ஊர்வலம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலையில் சக்தி அழைப்பும், அலகு சேவையுடன் கத்தி போடுதல் மற்றும் மாலையில் மகா ஜோதி தரிசனம் நடந்தது. இரவு சிம்ம வாகனத்தில் ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. ஊராட்சி தலைவர் கலா ராஜவேலாயுதம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தெலுங்கு தேவாங்கர் குல மக்கள் செய்தனர்.