ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மறவபட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. விழாவில் மாமன், மைத்துனர் (மச்சான்)உறவு முறையினர் பழைய துடைப்பத்தால் ஒருவரை, ஒருவர் அடித்துக் கொள்ளும் நேர்த்திக் கடன் நிகழ்ச்சி நடந்தது. மறவபட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழாவில் அம்மனுக்கு கரகம் எடுத்து, சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் செய்து பொங்கல், மா விளக்கு ஏற்றி, தீச்சட்டி எடுத்து வழிபட்டனர். இரண்டாம் நாளில் மாமன், மைத்துனர் உறவுமுறை கொண்டவர்கள் கோயில் முன் கூடினர். உடல் முழுவதும் சேறு பூசிக்கொண்டு வேஷமிட்டு பழைய துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். நீண்ட நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்றனர். வெளியூரில் இருந்து வருபவர்கள் உறவு முறை அல்லாதவர்களை யாரையும் இவர்கள் தொந்தரவு செய்வதில்லை. அம்மனுக்கு நேர்த்திக் கடனாக ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடத்துவதாகவும், இந்த நிகழ்ச்சியால் சுப காரியங்கள் நடப்பதாகவும் கிராம மக்கள் நம்புகின்றனர்.