பதிவு செய்த நாள்
09
மே
2015
11:05
ஓமலூர் :ஓமலூர் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், விமான அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினர்.சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கமலாபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடப்பது வழக்கம். இதே போன்று இந்த ஆண்டு, 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்று வந்தது. திருவிழாவில் இறுதி நாளான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் இட்டும், ஆடு, கோழி உள்ளிட்டவைகளை பலியிட்டும் வழிபட்டனர்.இதை தொடர்ந்து மாலையில் அலகு குத்துதல், கரகம் எடுத்தல், உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது. அக்கினி கரகம், பூங்கரகம், கம்பி அலகு, நாக்கு அலகு, விமான அலகு குத்தி பக்தர்கள் வந்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், அந்தரத்தில் தொங்கியவாறு, விமான அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.