இமயமலையின் சிகரத்தை விட வாழ்வில் உயர்ந்து நில்லுங்கள். ஆழ்ந்த கடலைக் காட்டிலும் ஆழம் கொண்டவராக திகழுங்கள். இயற்கை நம்மிடம் சில சமயங்களில் இரக்கமற்று நடந்து கொள்கிறது. இது நம்மை நிலை குலையச் செய்கிறது. அதேநேரம், இதை கடவுளின் விளையாட்டு என நினைப்பவர்கள், இந்த நிகழ்வுகளைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். கடவுள் மகத்தானவர் என்பது உண்மை. அதனால் தான், மனிதனின் துõற்றுதலையும், ஏளனத்தையும் கூட ஏற்றுக் கொண்டு மவுனம் சாதித்துக் கொண்டிருக்கிறார். மரணத்தை நம்மால் வீழ்த்த முடியாது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க யாராலும் முடியாது. அதுபற்றி சிந்திப்பதை விட, வாழும் காலத்தை மேம்படுத்திக் கொள்ள முயலலாம். துன்பத்திற்காக வருத்தப்பட வேண்டாம். அது முட்டாள்தனமான செயல். துன்பத்திற்குப் பின் வரவிருக்கும் நன்மையை எண்ணிப் பாருங்கள். பகட்டான பேச்சை நம்பி ஏமாந்து விடக்கூடாது. ஒருபோதும், அறிவு மயங்கி விட அனுமதிக்கக் கூடாது. கண்களைத் திறந்து உலகத்தைப் பாருங்கள். அப்போது இழிவானது என்று எந்த ஒரு பொருளும் உலகில் இருப்பதாகத் தெரியாது. வீண்பேச்சு பேசாதீர்கள். வாதம் செய்வதில் திறமை பெற்றவர்கள், தங்களுடைய தவறை உணர முடிவதில்லை. அவர்களின் திறமை, பொய்மைக்கு முகமூடி மாட்டவே முயல்கிறது. குறுகிய மனப்பான்மையை விட்டுஒழியுங்கள். கீழ்த்தரமான விஷயங்களைப் புறந்தள்ளுங்கள். வானத்தைக் காட்டிலும் பெரிதாக விரிவடையுங்கள். அற்பமான உலக விஷயங்களில் மனதை அலைபாய விடாமல், தெய்வீக அன்பிலும், உலகை இயக்கும் இறைவனிடமும் திளைப்பவனே சிறந்த மனிதன். கண்ணை மூடிக் கொண்டு பழைமையில் ஊறிக் கிடப்பவர்கள் கிளிப்பிள்ளைகள். இறைநம்பிக்கையுடன் வாழ்வு நடத்துபவனுக்கே நல்ல எதிர்காலம் அமையும். சின்னஞ்சிறிய மலரிலும் கடவுளின் இருப்பைக் காண முடிந்தவனே, கடவுளின் பூரணத்தன்மையை அறிந்தவன். தீயவர்களிடமும் நன்மை இருக்கிறது. ஒழுக்கசீலரிடமும் தீமை இருக்கிறது. இதில் குழம்புவதற்கு ஒன்றுமில்லை. அமைதியாகச் சிந்தித்துப் பார்த்தால் உண்மை புரியும். கடவுளின் முன்னால் நாம் அற்பப்புழு. அப்படியிருக்கும்போது, மனிதன் அகந்தையோடு செயல்படுவதற்கு என்ன இருக்கிறது? ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் இறைத் தன்மையை வெளிப்படுத்துங்கள். செய்யும் பணியே ஒரு வேள்வியாகட்டும். இதன் மூலம் நம் வாழ்வு சிறப்படையும். மூளையைக் கொண்டு கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவர் இதயத்தோடு மட்டுமே பேச விரும்புகிறார். அடைய வேண்டிய குறிக்கோள் வெகுதுõரத்தில் இருக்கிறது. அளவுக்கு மீறி ஓய்வெடுக்க வேண்டாம். விரைந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.