பதிவு செய்த நாள்
26
மே
2015
12:05
நாமக்கல்: பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. நாமக்கல், பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு விழா, கடந்த, 10ம் தேதி சக்தி அழைப்பு, காப்பு கட்டு, கம்பம் நடுதலுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, தினமும் காலை அபிஷேக ஆராதனையும், இரவு, ஸ்வாமி திருவீதி உலாவும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் இடப்பட்டது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு, விசேஷ அபிஷேக அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து, காலை, 7 மணிக்கு தேர் புறப்பாடு நடந்தது. நாமக்கல் நகரின் அனைத் வீதிகளுக்கும் தூக்குத்தேரை பக்தர்கள் தூக்கிச் சென்றனர். வழிநெடுகிலும் பக்தர்கள் ஸ்வாமிக்கு பூஜை செய்து வழிபட்டனர். மேலும், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்று இரவு, 7 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இன்று (மே, 26) காலை, 7 மணிக்கு அபிஷேக ஆராதனை, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (மே, 27) காலை, 8 மணிக்கு, மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.