பதிவு செய்த நாள்
01
ஜூன்
2015
11:06
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று நடந்த தீமிதி திருவிழாவில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. திருத்தணி ஒன்றியம், குடிகுண்டா கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், கடந்த 14ம் தேதி, கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா துவங்கியது. மூலவருக்கு சந்தனக் காப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம் 2:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, மகாபாரத சொற்பொழிவும், இரவு 10:00 மணிக்கு, மகாபாரத நாடகமும் நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று, காலை 10:30 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில், பீமன், துரியோதனனை வீழ்த்தி, அவரது உதிரத்தால், திரவுபதியம்மன் கூந்தல் முடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை 6:30 மணிக்கு, ஆயிரம் பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து, தீ மிதித்தனர். பின், உற்சவர் அம்மன், சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், குடிகுண்டா மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இன்று காலை 11:00 மணிக்கு, தருமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.