பதிவு செய்த நாள்
01
ஜூன்
2015
02:06
கோவை: கோவை மாவட்டம், காரமடையில் உள்ள வைணவத் தலமான, அரங்கநாத பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம், ஜூன் 7ல் நடைபெற உள்ளது. தேவகுரு பிரகஸ்பதியின் மகள் சைலலட்சுமியாக அவதரித்த மகாலட்சுமி, அரங்கனை மணம் புரிந்து அரங்க நாயகி தாயாராக வீற்றிருந்தார். ஆண்டாளை அரங்கன் மணந்து கொண்டதை கோபம் கொண்ட தாயார், பிறந்த வீடான பிரகஸ்பதி மலைக்குச் சென்று, குகையில் தவக்கோலம் மேற்கொண்டார். தாயாரை சமாதானப்படுத்தி அழைத்து வர எண்ணிய அரங்கன், வெள்ளைக்குதிரை மீதேறி பிரகஸ்பதி மலைக்கு சென்றார். வழியில் மாடு மேய்த்த தம்பதியை கண்ட அரங்கன், மலை மீது யாராவது சென்றார்களா எனக் கேட்க, இருவரும் பதில் கூறாது நின்றனர்.
உண்மையை கூறாவிட்டால் கல்லாக போவீர்கள் என அரங்கன் சபித்ததும், பயந்து போன மனைவி, ஆம் சுவாமி, மலை மீது தாயார் செல்வதை கண்டோம் எனக் கூறிவிட்டார். அடுத்த கணமே, அவளது தலை வெடித்து சிதறியது. தான் மலை மீது செல்வதை யார் வந்து கேட்டாலும், சொல்லக்கூடாது. மீறிச் சொன்னால் தலை வெடிக்கக்கடவது என தாயார் சபித்திருந்ததே இதற்கு காரணம். உண்மையை கூறாது நின்ற அவள் கணவனும் கல்லாகி விட்டான். அவர்களது சிலைகள் தற்போதும் மலைக்கு செல்லும் வழியில் உள்ளன. அதன்பின் மலை மீது ஏறிச்சென்ற குதிரை, ஒரு குகையின் முன், மண்டியிட்டு, நகர மறுத்தது. குதிரையின் குறிப்பை உணர்ந்த அரங்கநாதர், தாயார் இருக்கும் குகையினுள் சென்றார்.
அரங்கனின் சமாதானத்தை ஏற்ற தாயார், தாங்கள் வற்புறுத்துவதால், மாசிமகத் திருவிழாவின்போது மட்டும், தங்களோடு இருப்பேன். மற்ற நாட்களில் இங்கேயே வாசம் புரிவேன் என்றுகூறி விட்டார். திருவிழா நாட்களிலாவது இருக்க சம்மதித்தாரே என, மனம் மகிழ்ந்த அரங்கன், திரும்பவும் தன் தலத்துக்கே வந்து சேர்ந்தார். அதன்படி மாசிமக விழாவின் ஏழாம்நாள், கோவிலிலிருந்து அர்ச்சகர் ஒருவர் மீது பெருமாள் எழுந்தருளி, பெட்டத்தம்மன் மலைக்கு சென்று, தாயாரை அழைத்துக் கொண்டு லட்சுமிநாராயணன் சொரூபமாக வந்து, திருக்கல்யாண உற்சவம் கண்டருள்வதாக புராண வரலாறு கூறுகிறது. ஆண்டுதோறும், அம்மன் அழைப்பு என்ற பெயரில், வாண வேடிக்கை, தாரை, தப்பட்டை முழங்க நடைபெறும் இந்நிகழ்ச்சி வேறு எங்குமே காண இயலாத ஒன்றாகும். பிரகஸ்பதிமலை, தற்போது பெட்டத்தம்மன் மலை எனப் பெயர் கொண்டு விளங்கி வருகிறது. இம்மலை குகையில், தாயார் விக்ரஹரூபமாக வீற்றிருக்கிறார். தடாகம் அருகில் அனுமான் காவலாக நின்ற நிலையில் உள்ளார். இங்குள்ள தீர்த்தத்தில் குளித்தால், பிணிகள் தீரும் என்பது ஐதீகம்.