பதிவு செய்த நாள்
04
ஜூன்
2015
12:06
கோவை: கோவை மாவட்டம், காரமடையில் உள்ள வைணவத் தலமான, அரங்கநாத பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம், ஜூன் 7ல் நடைபெற உள்ளது. அதையொட்டிய தொடர் கட்டுரையின் 11ம் பகுதி இங்கே.. காரமடை அரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் சுக்லபட்ஷ பிரதமை திதி தொடங்கி, தசமி திதி வரை, 10 நாட்கள் பகல் பத்து உத்ஸவம் திருமொழித் திருநாள் விழா நடைபெறும். இந்த, 10 நாட்களும் பகலில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் ரங்கமண்டபத்தில் எழுந்தருள்வார். அவர் முன், தமிழ் பிரபந்தமான ஆழ்வார் திருமொழி சேவிக்கப்படும். பத்தாம் நாள் மாலை, பெருமாள், நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு, அருள்பாலிப்பார்.
வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை, அரங்கநாதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேஷ வாகனத்தில் புறப்பட்டு, சொர்க்க வாசலுக்கு எழுந்தருள்வார். அங்கு மண்டப கட்டளைகள் முடிந்தவுடன், கோவில் அர்ச்சகர் சொர்க்கவாசல் திறவு கோலை, வேதவ்யாச பட்டரிடம் கொடுப்பார். அவரிடம் இருந்து ஊர் கவுடர் திறவு கோலை பெற்று, சொர்க்க வாசல் கதவை திறப்பார். அப்போது சொர்க்க வாசலுக்கு எதிர்புறம் பெருமாளை எதிர்நோக்கி, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் எழுந்தருளி வரவேற்பர். முதலில் இவர்களுக்கு திருப்பரிவட்ட சடாரி மரியாதைகள் நடக்கும். பின், பெருமாள் உபயநாச்சியாருடன் சொர்க்கவாசல் வழியாக திருவீதி புறப்பாடு நடக்கும். தேரோடும் வீதிகளில் அனைத்து சமூகத்தினர்களால் தனித்தனியே அமைக்கப்பட்ட பந்தல்களில், மண்டபக் கட்டளை பூஜைகள் நடைபெறும். அதன்பின், இரவு வசந்த மண்டபத்தில் ராப்பத்து மண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்வார். அங்கு ஸ்தலத்தார், பட்டர் சுவாமிகள், பெருமாள் முன் திருவாய்மொழி பாசுரங்கள் சேவிப்பர். சகஸ்ரநாம அர்ச்சனை, திருவாராதனம் தீர்த்த பிரசாத வினியோகம் செய்த பின், பெருமாள் ஆஸ்தானம் சேருவார். விடியற்காலைப் பொழுதாகிய மார்கழி மாதம் சுக்லபட்சம் (வளர்பிறை) ஏகாதசி திதி கூடிய நாள், வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது. அன்று வைகுண்டத்தில் உள்ள வடக்கு பார்த்த வைகுந்த வாசல் திறக்கப்பட்டு, எம்பெருமான் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பதாக ஐதீகம். அந்நாளில், வைணவ தலங்களில் உள்ள வைகுந்த வாசல் (சொர்க்கவாசல்) வழியாக நுழைந்து இறைவனை சேவிக்கும் அனைவரும், பிறவிப் பெரும் நோய் நீங்கி, பிறவாப் பெரும் பயன் என்னும் பரமபத பதவி பெறுவர் என்பது, பக்தர்களின் உறுதியான நம்பிக்கை.