பதிவு செய்த நாள்
03
ஜூன்
2015
03:06
கோவை: கோவை மாவட்டம், காரமடையில் உள்ள வைணவத் தலமான, அரங்கநாத பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம், ஜூன் 7ல் நடைபெற உள்ளது. காரமடை அரங்கநாதரின் சக்தியை புலப்படுத்த, ஒரு உண்மை சம்பவம், இன்றளவும் நினைவூட்டப்படுகிறது. கடந்த, 130 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடந்தன. ஆங்கிலேய இன்ஜினியர் ஒருவர், ரயில் பாதையை கோவிலின் அருகே அமைக்க மதிப்பீடு செய்தார். ஊர் மக்கள், முக்கிய பிரமுகர்கள், இவ்வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டாம் என, இன்ஜினியரிடம் முறையிட்டனர். அதெல்லாம் முடியாது, கோவில் வழியாகத்தான் ரயில்பாதை அமைக்கப்படும் என்று, அவர் உறுதியாக கூறிவிட்டார். இவ்வழியாக ரயில் பாதை அமைத்தால், கோவிலுக்கு பாதிப்பு ஏற்படுமே என, கிராம மக்கள் வருத்தப்பட்டனர். ரயில் பாதை மதிப்பீடு பணிகளை முடித்துக்கொண்டு, தான் தங்கியிருந்த அறைக்கு இன்ஜினியர் சென்றார்.
இரவு தூங்கும் போது, அவரது கனவில், அரங்கநாதப் பெருமாள், ஒரு வெள்ளைக்குதிரையில் வந்து, கோபத்துடன், ஆங்கிலேயே இன்ஜினியரை சாட்டையால், இருமுறை அடித்தாராம். திடீரென கனவு கலைந்து எழுந்த இன்ஜினியர், தனது தவறை உணர்ந்து, அரங்கநாதப் பெருமாளிடம் மன்னிப்பு வேண்டினாராம். தனது கனவில், பெருமாள் வெள்ளைக்குதிரையில் வந்து, சாட்டையால் அடித்து விட்டதாக, கோவில் அர்ச்சர்களிடம் அந்த ஆங்கிலேயர் கூறியுள்ளார். அதன்பிறகு தான், ரயில்பாதையை வேறு பக்கம் மாற்றி அமைக்க, திருத்திய மதிப்பீடு தயாரித்துள்ளார். தம் சொந்தச் செலவில் மரக்குதிரை செய்து, வெள்ளை பெயின்ட் அடித்து, கோவிலுக்கு அன்பளிப்பாக கொடுத்து, இறைவனை வணங்கினாராம். ஆங்கிலேய இன்ஜினியர் கொடுத்த வெள்ளைக்குதிரையில் தான், இன்றைக்கும் அரங்கநாதப் பெருமாள், எழுந்தருளி பரிவேட்டை உற்சவத்திற்கு திருவீதி உலா புறப்படுகிறார். 130 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த வெள்ளைக்குதிரை கோவிலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.