பதிவு செய்த நாள்
05
ஜூன்
2015
12:06
கோவை: கோவை மாவட்டம், காரமடையில் உள்ள வைணவத்தலமான, அரங்கநாத பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம், ஜூன் 7ல் நடைபெற உள்ளது. அதையொட்டிய தொடர் கட்டுரையின் 12ம் பகுதி இங்கே... காரமடை அரங்கநாதர் கோவிலில், ஒன்றரை கோடி ரூபாய் செலவில், ஏழுநிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அமைப்பு, சோழர்கள் பாணியை தழுவியது. 81 அடி உயரம் கொண்ட ஏழு நிலை கோபுரத்தில், 96 சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 100 யூனிட் மணல், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் செங்கல் கொண்டு கோபுரம் உருவாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கல்லல் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் மேற்பார்வையில், நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் சிற்பிகளின் கைவண்ணத்தில் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. பல்வேறு கோவில் ராஜகோபுரங்களை கட்டிய அனுபவம் கொண்ட சிற்பி மாரியப்பன் கூறியதாவது: காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமலை நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது ராஜகோபுரம், 81 அடி உயரத்தில், ஏழுநிலையில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் திருமதில் இணையும் இடத்தில் உள்ள, கோவிலின் பிரதான வாசலின், மத்திய பாகத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. கோபுர முகப்பு மற்றும் பின் பக்கம் தலா, 38 அடி அகலம், இரு பக்கம் தலா இருபத்தைந்தே முக்கால் அடி அகலத் தில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தில் உள்ள ஏழு நிலையிலும், துவாரபாலகர்களான ஜெயன், விஜயன் சிலைகளும், கிருஷ்ண அவதாரத்தை குறிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. முதல்நிலையில், முன்பக்கம் கிருஷ்ணரின் அவதாரங்களை குறித்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்பக்கங்களில் ஆழ்வார்கள், வடக்கு பக்கம் வராஹ அவதாரங்கள், தெற்கே நரசிம்ம சுவாமியின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் நிலையில், ஸ்ரீதரன், மாதவன், ஆழ்வார்கள் சிலைகளும், மூன்றாம் நிலையில், கோவிந்தன், ஷங்கர்ஸனன், கருடாழ்வார்கள் சிலைகளும், அமைக்கப்பட்டுள்ளன. ஏழாம் நிலையில், கோபுர உச்சியில், இரு பக்கமும் மஹாநாசிகள் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோபுர உச்சியில், ஏழு கலசங்கள் அமைக்கப்படும். இவ்வாறு, மாரியப்பன் தெரிவித்தார்.